தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

கிருஷ்ணகிரி அருகே அரசு அதிகாரியைக் காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் – ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடத்தைப் புகட்டுவது உறுதிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் திரு. சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சீனிவாசன் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. எளிதில் பேசி தீர்க்க வேண்டிய வாகன நிறுத்தம் தொடர்பான சிறிய வாக்குவாதத்தை, வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி, ஆளுங்கட்சி நிர்வாகியின் மகன் என்ற அதிகாரப்போக்கில் அரசு அதிகாரி என்றும் பாராமல் திரு.சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்திருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. திரு.சிவமூர்த்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த பின்பும், திமுக நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணையைத் தீவிரப்படுத்தாமலும் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உதவி தொழில் ஆய்வாளர் திரு.சிவமூர்த்தி அவர்களைக் கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதே நேரத்தில், ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது – மக்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லியிலிருந்து வந்த காவல்துறை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாகத் திசைதிருப்பி, மக்களை ஏமாற்ற முயன்ற திமுக அரசு, தற்போது டெல்லி காவல்துறையால் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருப்பதை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? திருப்பூரில் தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை டெல்லியிலிருந்து வந்த காவல்துறையினர் கைது செய்யும் வரையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழக தீவிரவாத தடுப்புப் படை தூங்கிக் கொண்டிருந்ததா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, தற்போது தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் இணைந்து முடிவு கட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேங்காங்கில் நடைபெற்ற ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி உட்பட 5 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்திருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.மரியவின்சியா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியால் ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் செல்வி. மரியவின்சியா அவர்கள், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைப் பயணத்தை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

“தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரீகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.