திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி! திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற கதவுகளை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம் என்று மக்கள் உரத்தக் குரலில் சொல்ல தொடங்கி விட்டனர் . விடியலை தருவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையைக் கூட முறையாக கையாள முடியவில்லை என்பதும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தினம் தினம் நிரூபணமாகிவருகிறது. இந்நிலையில் மீதமிருக்கும் சில மாதங்களாவது தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு அவர்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருந்திடவும்; தொடர்ந்து இதுபோல கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் திட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது – எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பாக சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கக் கூடிய வடசென்னையில் ஏற்கனவே 3330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது கூடுதலாக 660 மெகாவாட் அளவிற்கான அனல்மின் நிலையத்தை அமைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் என அபாயகரமான தொழிற்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் வடசென்னையில் மேலும் ஒரு அனல் மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம், கொசஸ்தலை மற்றும் எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது அவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, இயற்கை வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

“திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் கைதுக்கு பின்னர் நடந்த எழுச்சியின் பின்னணியையும் விளைவையும் ஆராய்ந்து நூலாக தொகுத்த திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் எழுத்துப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் – தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே திரு.மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவ்வழியாக வந்த மற்றொரு நபர் ஒருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் சாதாரண குடியிருப்புகள் தொடங்கி கோவில்கள், காவல் நிலையங்கள், திரையரங்குகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், ஆளுநர் மாளிகை என பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெறாத இடங்களே இல்லை எனும் சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் தற்போது இணைந்திருக்கும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்திருப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் எந்தவித அச்ச உணர்வுமின்றி பொதுமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.