தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் – தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை கட்டுப்படுத்தாமல் தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொடியவகை போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கவோ, பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் அவற்றை அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஆண்டுதோறும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் ஏற்பது எந்தவகையிலும் பயனளிக்காது. எனவே, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இனியாவது கண்விழித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா? பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தோடு விளையாடும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.