கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? – தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.