கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது கத்திக்குத்து – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது ? சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது நடைபெற்றிருக்கும் கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை வழங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தால், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரையே தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை – ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமுல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது. எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விஷ ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை சர்வே பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஜந்துகள் கடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வேளாண்மைக்கான நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சர்வே பணிகளில் வருவாய் துறையினரை ஈடுபடுத்தாமல், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி அவர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. டிஜிட்டல் சர்வே பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தியும், பயிற்சி பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சர்வே பணிகளை செய்து வருவதாக அறியவரும் நிலையில், தமிழக அரசு மட்டுமே அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, விஷ ஜந்துகள் கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு வருவாய்த்துறை மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய சர்வே பணிகளில் முன் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருவண்ணாமலை அருகே மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விபத்து – தரமற்ற கட்டடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 15 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பது ஒட்டுமொத்த கட்டடத்தின் உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேற்கூரை பெயர்ந்து விழுந்த அசாதாரண சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் இல்லாதது நிம்மதியை அளித்தாலும், தமிழகத்தின் பல்வேறு அரசுப்பள்ளிகளில் கட்டப்பட்டிருக்கும் தரமற்ற கட்டடங்களின் மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விபத்துக்குள்ளாவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தரமற்ற கட்டடங்களை கட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இன்று மீண்டும் 13 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.