October 10, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்டம், பொங்கலூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.குமரவேல் அவர்களின் தாயார் திருமதி.G.முத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டுவது எப்போது? புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 21 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அவர்களின் நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 21 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில், 50 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
October 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
October 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய திரு.ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் கிழக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.M.சேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டம் : கோட்டகுப்பம் நகரக் கழக செயலாளர் திரு.S.பக்ருதீன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
October 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது- தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதாக கூறி நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளில் ஒன்றான தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு, தொடக்கம் முதலே சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இரவு நேரத்தில் வீடு தேடிச் சென்று கைது செய்வதும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்ய பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்வதும் தான் தொழிலாளர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியா ? என தொழிலாளர்களே சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர். எனவே, காவல் துறையால் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
October 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை தொடங்கியவரும், சாதி மறுப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தவருமான திரு.இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திரு.இமானுவேல் சேகரனார் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்.
October 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு பயணிக்கும் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது – மக்கள் நலனுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகரில் பள்ளிகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.செந்தில்நாதன் அவர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உறையூர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட தனியார் மனமகிழ் மன்றத்தை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் கைது செய்த காவல்துறை, தற்போது பொதுமக்களின் நலனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போதெல்லாம் அடக்குமுறையும், அதிகாரப்போக்கும் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதை காரணமாக கூறி அனுமதி மறுத்திருக்கும் காவல்துறை, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.