திருவாரூர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை – மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா திமுக அரசு?திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து தலைமைக் காவலர் மீது கொடூரத் தாக்குதல் – சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்து தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உறுதி செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பேணிக்காணிப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் திமுக அரசின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியாததன் விளைவே தற்போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. குற்றச்சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என புகழ்ந்ததற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொய் கூறியதற்கும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். எனவே, காவல் நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் புதுப்புது கதைகளை தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிப்பு – பொதுமக்களின் புகார் மீது விரிவான ஆய்வு நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.