June 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
June 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை – திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்ட கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான திரு.சக்கரவர்த்தி அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.சக்கரவர்த்தி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவராகவும் பிரபல வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த திரு.சக்கரவர்த்தி அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.ராணிப்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுகவின் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கி திரு.சக்கரவர்த்தி அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரையிலான செய்திகளை பார்க்கும் போது தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மேலோங்கியிருப்பதையே நம்மால் உணர முடிகிறது. எனவே, பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் விரிவாக விசாரித்து வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
June 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் அப்பாக்களை போற்றிக் கொண்டாடும் தந்தையர் தினம் இன்று. குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதோடு, அளப்பரிய அன்பு மற்றும் கனிவான கண்டிப்போடு உணர்வுப்பூர்வமிக்க உறவாக திகழும் தந்தையர் ஒவ்வொருவரையும் இந்நாளில் போற்றிக் கொண்டாடிடுவோம்.
June 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை – மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா திமுக அரசு?திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
June 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து தலைமைக் காவலர் மீது கொடூரத் தாக்குதல் – சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்து தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உறுதி செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பேணிக்காணிப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் திமுக அரசின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியாததன் விளைவே தற்போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. குற்றச்சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என புகழ்ந்ததற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொய் கூறியதற்கும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். எனவே, காவல் நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் புதுப்புது கதைகளை தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
June 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிப்பு – பொதுமக்களின் புகார் மீது விரிவான ஆய்வு நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.சுரேஷ்பாபு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
June 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.