தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் – தூய்மைப் பணியாளர்களின் அருகில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்கள் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மாநிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு, பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. நிரந்தர பணி பாதுகாப்பின்றியும், போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றியும் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு அருகில் அமர்ந்து உணவருந்துவது போன்ற புகைப்படங்களை எடுத்துக் கொள்வது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட எந்த வகையிலும் உதவாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட முறையாக நிறைவேற்ற முன்வரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதோடு, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்த மாணவர்கள் கைது – தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கொடுங்கையூர் அருகே வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நாள்தோறும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான செய்திகளையும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும் திமுக அரசு கண்டு கொள்ளாததன் விளைவே, கல்லூரி மாணவர்கள் தங்களின் வீட்டிலேயே போதைப்பொருளை தயாரிக்கும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசி, போதை மாத்திரைகள், போதை மிட்டாய்கள் உள்ளிட்ட போதை வஸ்துகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்டை மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் – பொதுமக்களுக்கு குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குவதை மத்திய அரசும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) உறுதி செய்ய வேண்டும். சேனல் விலையை 19 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் அன்றாட நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பயன்படுத்தக் கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதால் பொதுமக்களுக்கான மாதாந்திர கேபிள் கட்டணமும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் கேபிள் டிவி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு, தொழிலை முற்றிலும் முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக கேபிள் டிவி சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, கேபிள் டிவி தொழிலை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த சேவை வழங்கும் நோக்கிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் – நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்க முன்வராத திமுக அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அப்பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்தே இயக்க முயற்சிப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் வரிசையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத உயர்கல்வித்துறையின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படாத காரணத்தினால் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 8 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பெரும்பாலான அரசு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் தொடர் சரிவை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பேராசியர்கள் இல்லாத காரணத்தினால் பாடத்திட்டத்திற்கு தகுந்த வகுப்புகள் முறையாக நடைபெறுவதில்லை எனவும், குறிப்பாக கிராமப்புற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசின் உயர்கல்வித்துறை, அந்த அறிவிப்புக்கு பின் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அக்கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.