திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது. தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1, 177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை – குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.