எல்லை தாண்டியதாகக் கூறி கடந்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு . ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை மன்னார் வடக்கு கடற்பரப்பு அருகே எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் படகையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் இதே ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 7 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதும், மறுபுறம் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு கைது சம்பவத்தின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இனியும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடராத வகையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கும், அராஜகத்திற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணிக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நோயாளிகளின் நல்வாழ்வுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவமனைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நடப்பாண்டிலாவது நிறைவேற்றித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ஏறக்குறைய ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் – விதிகளை மீறிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக்குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.நீதிமன்றம் மூலமாகவோ, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாகவோ குறைக்கப்படும் வரியை, தன்னிச்சையாக குறைத்திருப்பதோடு, வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் கடவுச் சொற்களும் (Password) முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அனைத்து வரிவிதிப்புகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெற்றிருக்கும் இந்த வரிக்குறைப்பு முறைகேடு திமுகவின் அடிப்படை குணமான விஞ்ஞான ஊழலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகியுள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் – திரைப்படங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.