“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வரிகளின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்தவரும், தன் தலைசிறந்த படைப்புகளின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை விதைத்தவருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்து தன் எழுச்சி மிகுந்த எழுத்துக்களாலும், ஆற்றல் மிகுந்த படைப்புகளாலும் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களையும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததாக புகார் – பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது.திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் உறையூர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற திமுக அரசும் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?எனவே, மூன்று பேர் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்.கூலி உயர்வு வழங்கக் கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னரும், மீண்டும் அதே போராட்டத்தில் பங்கேற்றிருப்பது, கூலி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு எத்தகையை அவசியமானது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருப்பதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, இப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற தமிழக அமைச்சர்களின் வாக்குறுதி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு அவர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.