கரூர் அருகே மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் – பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தன்னலம் கருதாமல் மக்களை பாதுகாத்திடும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா ? கரூரில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க முன்வராத முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதாலும், அவ்வப்போது புகழ்ந்து பேசுவதாலும் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லை. எனவே, தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி பாதிப்புக்குள்ளான 30க்கும் அதிகமானோர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. பருவமழைக் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீரைக் கூட முறையாகவும், சுத்தமாகவும் விநியோகிக்கத் தவறிய தாம்பரம் மாநகராட்சி மற்றும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநகராட்சி மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார் மனுக்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே இன்று விலைமதிப்பில்லாத இரண்டு உயிர்களை இழக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, பல்லாவரம் பகுதி முழுவதும் மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வுமே என்னுடைய இலக்கு எனக்கூறி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயமாக திகழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.