நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்திய அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். வெறுமனே வழக்குப்பதிவு மட்டும் செய்யாமல் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்.

போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன்? தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நினைப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் என்பது திமுக அரசுக்கு தெரியாதா? காலிப்பணியிடங்களில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காமல் மாற்று காரணங்களை முன்னிறுத்தி தொடர்ந்து காலதாமதம் செய்வதன் பின்னணியிலும் உள்ள மர்மம் என்ன? ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி முடித்த எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், விடியா அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் வாக்குறுதி படி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் “ஆதனின் பொம்மை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர், சிறுவனின் பசியை விவரிக்கும் “திருக்கார்த்தியல்” என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கின்றேன். எழுத்தாளர்கள் இருவரும் தமிழ் சிறார் இலக்கியத்துக்கு தொண்டாற்றும் வகையில் மேலும் பல படைப்புகளை எழுதி தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் இந்த விபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் திருமதி.சிவகாமி அவர்களின் மகனும், கடலூர் மத்திய மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் மற்றும் கழக தொண்டர்கள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மேலும் வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் உறவினர்களும் மற்றும் தொண்டர்களும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.