அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கான நடுநிலை செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாளில், உலக நாடுகளை செய்திகள் மூலம் இணைக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பேணி காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.குமார் அவர்கள், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது. மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதோடு, மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோடை கால வெயில் தாக்கத்திலிருந்து பறவைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் – வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு தீவிர வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தை மனிதர்களே சமாளிக்க முடியாத நிலையில், வனப்பகுதிகளிலும், சரணாலாயங்களிலும் வாழ்ந்து வரும் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தங்களின் உணவு மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும் வறண்டு போய் இருப்பதாலும், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலும், போதுமான தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களில் வனத்துறை சார்பாக சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து, அதில் போதுமான அளவு தண்ணீரை தேக்கிவைத்து, கோடைவெயிலில் சிக்கித் தவிக்கும் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும். கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படாது என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியையும் மீறி தற்போது நடைபெறும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும். எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.