பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக சமூகநீதியின் அடிப்படையையே சீர்குலைப்பதுபோல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.உச்சநீதிமன்ற தீர்ப்பில்10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் பட்டியலிட்டிருக்கும் காரணங்களை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ளலாம். மேலும், தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அதேநேரத்தில், இந்த 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, அம்மா அவர்கள் கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும்.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். சென்னை தவிர தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட கனமழை பெய்துவரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் உதவி பணிகளை விரைந்து செயல்படுத்திட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தமிழக அரசு தாமதமின்றி அமைத்திட வேண்டும். நீர்நிலைகளையும் வடிகால்களையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த திரு.சச்சின் சிவா (எ) C.சிவக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளம் வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டாலும் தனது கடின உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் சிவா, இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கிரிக்கெட்டில் புதிய சாதனைகளைப் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் பெருமை தேடித்தர வேண்டுகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.