பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அவனி லெகரா அவர்களுக்கும் அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மோனா அகர்வால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு – விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அப் பல்கலைக்கழகங்களில் உயிர்கல்வி பயிலும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் – நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரே ஊதியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை தமிழக அரசு ஏற்க வேண்டும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல் வரவேற்புக்குரியது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மறு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணை எண் 354-ஐ அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை அரசு மருத்துவர்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த நடைமுறையை செயல்படுத்த மறுப்பது ஏன்? என அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, பொதுமக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை அமல்படுத்தும் வகையிலும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.முரளிதரன் மற்றும் வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திரு. கோபிநாத் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்தி மகிழ்கிறேன்.

அரசுப் பணியாளர்களை புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து ஆட்சியை நடத்த முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிராக செயல்படுவது தான் திராவிட மாடலா? தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை அரசின் அனைத்துத் துறைகளிலும் எந்தவித வரைமுறையும், வழிகாட்டுதலுமின்றி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதிலும் அச்சாணிகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும் புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து கொள்கை முடிவுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் 3.5 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அரசுப் பணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஆலோசகர்களை நியமிப்பது சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிரான நடவடிக்கை என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஆலோசகர்களின் நியமனங்களை முற்றிலுமாக கைவிடுவதோடு, அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.