திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுதல் – வேலியே பயிரை மேய்வது போல போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி சட்டப்பேரவைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது முதலமைச்சரான பின் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. 2000 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கழக உடன்பிறப்புகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்திடுமாறு வேண்டுகிறேன். தகுந்த இடங்களை தேர்வு செய்து எளிமையான முறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளால் சுகாதாரமான முறையில் அமைக்கப்படும் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திட வேண்டும்.

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – சத்திய ஞானசபையின் மாண்பை குறைக்கும் வகையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நாள் முதல் இன்று வரை அத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மற்றும் வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்து பிடிவாதப் போக்கில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.