பொங்கல் பண்டிகையின் போது (CA) தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர். எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

வேலூரைத் தொடர்ந்து நீலகிரியிலும் பள்ளி செல்லும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் – பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம். நீலகிரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை கடத்திச் சென்று 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வேலூர் அருகே 13 வயது சிறுமி போதைக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி அருகே நடைபெற்றிருக்கும் மற்றொரு பாலியல் கொடுமைச் சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகிறது. தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்ககத்தை கட்டுப்படுத்தவோ, அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, போதைப் பொருட்களை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளும் ஒத்திகை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வேலூர் மற்றும் நீலகிரியில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் வழக்கறிஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கிவரும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாகவே வழக்கறிஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம் – ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் சுவடுகள் மறைவதற்கு முன்பாகவே ஒசூரில் வழக்கறிஞர் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.