திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் – உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் மகள் செல்வி. தாரணி அவர்கள், திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. செல்வி. தாரணி அவர்களை இழந்துவாடும் திரு.பாலாஜி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணி அவர்களை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை திரு.பாலாஜி அவர்கள் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, செல்வி.தாரணி அவர்களின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் தற்போதுவரை விடுவிக்கப்படாத நிலையில், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மீன்பிடி தடைக்காலமான இரண்டு மாதகாலம் கடலுக்குள் செல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தங்களின் படகுகளை பழுதுநீக்கி கடலுக்குள் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டியதாக கூறி கைது செய்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமே தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.