சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை – தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமீனில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு,இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு என புகார் – அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது ? திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இதே மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் நடைபெற்ற நிலையில், தற்போது தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது. அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக் காட்டியும் அதனை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையே அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.