தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது – கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. கிள்ளியூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அணுக் கனிம சுரங்கங்களின் மூலம், இயற்கையாகவே அதிக கதிரியக்க தன்மை கொண்ட கிராமங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடலரிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையோடு, கடல்பகுதியின் வளமும் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளனர். எனவே, அணுக் கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் – விரிவான விசாரணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்திற்காக வழங்கப்படும் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. துறையூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உரிய ஆய்வை மேற்கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில், தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட காவல் அதிகாரி திரு.சைலேஷ் குமார் அவர்களுக்கு கடந்த ஜனவரியில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு, தற்போது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் திரு.கண்ணன் அவர்களுக்கு தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத திமுக அரசு, மாறாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்து வருவது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும், தூத்துக்குடி மாவட்ட மக்களிடத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வருவதுதான் அவர்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையா? எனவே, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக காரணமாக கூறப்படும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.