தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா இன்று.சோழநாட்டுப் பகுதியைச் செழுமையாகவும், வலிமையாகவும் உருவாக்கியதோடு, ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மலைக்க வைக்கும் சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் வீரத்தையும், ஆளுமைத் திறனையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். அதே நேரத்தில், வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் தஞ்சை சோழர் அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தமிழ் வளர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.

நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 598 ரூபாயை வாடகை கட்டணமாகத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் 186 ரூபாய் மட்டுமே தங்களுக்கு வழங்குவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதோடு, நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரங்களில் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், 30 முதல் 40 நாட்களாகக் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் – பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.விதை நெல்லில் தொடங்கி உரம் தெளித்தல், வாடகை இயந்திரங்கள் என ஒரு ஏக்கருக்கு சுமார் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு வழக்கமாக அறிவிக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதோடு, நடப்பாண்டில் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று. தமிழகம் உயர, தமிழ்ச் சமூகம் வளர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, சுயவாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த அப்பழுக்கற்ற மாமனிதர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் போற்றி வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.