தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண தேநீர் கடைகளில் தொடங்கி பெரிய விடுதிகள் வரை அனைத்து வகையான உணவகங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உணவுத் தேவை பாதிக்கப்படுவதோடு, அந்த உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்திடுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் அஇஅதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.தம்பிதுரை அவர்களுக்கும், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதில் திமுக நிர்வாகிகளிடையே போட்டி – சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாகச் செயல்படுவதா? சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தின் அருகிலேயே திமுக நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் பெட்டிக் கடையின் மூலம் போட்டிப் போட்டு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே மேச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாமீனில் வெளிவந்து காவல்துறையினரின் ஆதரவோடு மீண்டும் அதே சட்டவிரோத மதுவிற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாக இருப்பதும், பொதுமக்கள் புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்க மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுத்து நிறுத்திடுவதோடு, அத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதரபுரம் ஆகிய தென்மாவட்ட மக்களின் பாசனத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் தன் சொந்த செலவில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய வள்ளல், மனிதநேயமிக்க பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. வறண்டு கிடந்த தென்மாவட்டங்கள் வளம்பெற, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் இந்த நினைவு தினத்தில், மக்களின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவில் கொண்டு போற்றுவோம்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். @BCCI#T20WorldCup

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி – பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பெண் இனத்தின் காவலர் வேஷம் போடுவது வெட்கக் கேடானது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குரூர மனம் கொண்டவன் மீது எடுக்கும் நடவடிக்கை இனி இதுபோன்று எவரும் சிந்திக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையினரின் சித்ரவதையால் கைதி உயிரிழப்பு எனப் புகார் – கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.