தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம் – தமிழகத்தில் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை தவிர்க்கவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். தகுதித்தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் முறைப்படி தேர்வாகி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் இணைந்த பணியாளர்கள் கள உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதே அவர்களை குடும்பத்துடன் போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஒப்பந்தப் பணியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமித்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் உறுதி செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர் சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது. பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ? பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ? எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.