தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும். தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.

ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும். 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, 25லட்ச ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,700 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதில் பாதியளவு கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அதிகாரப்போக்கே, பாடம் கற்பிக்கும் பணியைப் புறக்கணித்துப் போராடும் அளவிற்கான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களும் பயனளிக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேறுவழியின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதா? மாதாந்திர உதவித் தொகையை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகத் திகழும் அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு அதிகார போக்குடன் காவல் துறையை ஏவிப் போராடியவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதுச்சேரியில் 4 ஆயிரம் முதல் 5,700 ரூபாய் வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 1,500 ரூபாய் முதல் 2000 வரையிலான உதவித்தொகையை மட்டுமே வழங்குவது ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உதவித் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்குவதோடு கைது செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கேத்தனூரிலும், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்திலும் விஷ ஜந்துகள் கடித்ததில் அரசுப்பள்ளி மாணவர், மாணவி உயிரிழப்பு – அரசுப்பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் ஒருவரும், நாமக்கல் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதியின்மை, தரமற்ற காலை மற்றும் மதிய உணவு, பாழடைந்த நிலையிலான வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சி போன்ற விஷ ஜந்துக்களும் நுழைந்திருப்பது அப்பள்ளிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பெயரில் திரைப்பட பிரபலங்களையும் அண்டை மாநில அரசியல்வாதிகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருப்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விஷப்பூச்சி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.