பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் . பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ? இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

டெல்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு – தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ? காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ? கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.