சென்னை அரசு கலைக்கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் நாட்களிலாவது பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்துத் தூக்கி வீசும் அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – கொலையாளிகளும், கொள்ளையர்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும் ? சென்னை தரமணி அருகே, தன்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பலைத் தட்டிக் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கொலையான கணவர் மற்றும் குழந்தையின் உடல் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் வீசப்பட்ட மனைவியின் உடலை இரண்டாவது நாளாகக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன் மூலம் தமிழகக் காவல்துறை எந்தளவிற்குச் செயலிழந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதைத் தட்டிக் கேட்கச் சென்ற நபர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஆங்காங்கே வீசப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தை எட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளை குற்றவாளிகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குரூர மனம் படைத்தவர்களும், போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் சமூக விரோதிகளும் அச்சமின்றி சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இத்தகையச் செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத அளவிற்கான கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு – பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.பணிநிரந்தரம் கோரி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களும், ஊதிய உயர்வு கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராமப்புற சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, தொற்றுநோய் கண்காணிப்பு, குடும்ப நலச் சேவைகள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை பணிநிரந்தரம் செய்வதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதைப் போலவே, 2 மணி நேரம் மட்டுமே வேலை எனக்கூறி பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிச்சுமைகளுக்கு உள்ளாக்கியதோடு, ஊதிய உயர்வு கோரி போராடும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களை காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, போதுமான உட்கட்டமைப்பு வசதியின்மை என ஒட்டுமொத்த அவலத்தின் உருவமாக அரசு மருத்துவமனைகள் மாறி வரும் நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூரில் முதலமைச்சரைக் கருப்புக் கொடியுடன் சந்திக்க முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாகக் கைது – பலமுறை தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது ஏன் ? தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்து வாங்கிய கடனை கேட்டு விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுத்தும் பயனளிக்காத நிலையில், இன்று முதலமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பெயரில் மோசடியாக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதோடு, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்காமல் ஆலையை மூடிய தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூருக்கு வருகை தந்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்த போதும், இதே கோரிக்கையை வலியுறுத்திய கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளைக் கைதுசெய்த காவல்துறை, இம்முறையும் முதலமைச்சரைச் சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளான மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் பலியானதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.திரு.அஜித் பவார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.D.முத்து அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – டிடிவி தினகரன் கழக பொதுச்செயலாளர்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு சுதந்திரமடைந்த பின் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த இந்நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழும் வேளையில், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகள் அனைவரையும் நினைவில் வைத்துப் போற்றுவோம். நாட்டு மக்கள் அனைவரும் மனமுவந்து கொண்டாடும் இந்த குடியரசுத் திருநாளில் சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை குடியரசு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பத்மபூஷன் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மருத்துவர் திரு.கே.ஆர் பழனிசாமி, தொழிலதிபரும் சமூக சேவகருமான திரு. எஸ்.கே.எம். மயிலானந்தம் அவர்கள், விளையாட்டு வீரர் திரு. விஜய் அமிர்த ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல, பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் திரு.ஹெச்.வி. ஹண்டே அவர்கள், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.காமகோடி அவர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள், இசைக்கலைஞர்கள் திருமதி. காயத்ரி பலசுப்பிரமணியன்& திருமதி. ரஞ்சனி பாலசுப்பிரமணியன் அவர்கள், நடிகர் திரு. மாதவன் அவர்கள், கல்வியாளர் திரு. ராமசாமி அவர்கள், கல்வியாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும், அவரவர் துறைகளில் மேன்மேலும் சிறந்து விளங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருநெல்வேலி அருகே ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் – கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் அடுத்தடுத்து செயல்படும் 20 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வெடிவைத்துத் தகர்த்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதிகளின் விளைநிலங்களோடு, நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.சட்டவிரோத குவாரிகளோடு, உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு நிர்வாகத்துறைகளோ, பல்வேறு புகார்கள் குவிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதன் மூலம், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தனது பங்கிற்குக் கனிமவளக் கொள்ளையை ஊக்குவிக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இந்த 20 குவாரிகளில் உடனடி ஆய்வை மேற்கொண்டு கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது உறுதியானால் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.