சமநிலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும். சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் என, ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று. காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியைத் தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்குப் பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய், போன்ற மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில், அவர் விரும்பிய அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம், மற்றும் மதநல்லிணக்கம் மேன்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.

சாதியக் கொடுமைகள் மற்றும் சமுதாய பேதங்களோடு, பெண்ணடிமைத் தனத்தையும், மனிதர்களைத் தாழ்த்தும் மூட நம்பிக்கைகளையும் வேரோடு களையத் தொடர்ந்து போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை மேலோங்கச் செய்ததோடு, பொதுநலத் தொண்டையே தன் உயிர் மூச்செனக் கருதி இறுதிவரை போராடிய சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பெரும் தொண்டுகளை நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.