2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன. நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி – பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்குமேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார் ? தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.