விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பட்டாசு ஆலைகளை அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த ஐந்தாண்டுகளாக நிராகரித்துக் கொண்டே வந்த திமுக அரசால் தற்போது உயிரிழந்தோருடன் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.VP.குமரேசன், கழக அமைப்பு செயலாளர் திரு.P.R.மனோகரன், கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி, தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் திரு.M.ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று ஆழியார் அருகே உள்ள மலைப்பாதையில் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament ) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் செல்வி.வைஷாலி அவர்கள் அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.