பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதலமைச்சரின் அறை வரை தவெகவினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்? அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு நிர்வாகத்தில் தவெகவினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும், தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல. எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா? எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.