மறைந்த உயர்திரு அண்ணாமலை செட்டியார் அவர்களின் பேத்தியும், மறைந்த குமாரராஜா திரு எம்.ஏ.எம் முத்தையா செட்டியார் அவர்களின் மனைவியுமான குமார ராணி முனைவர் திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கல்வித்துறையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டு இளம் தலைமுறையினரைப் பொறுப்புணர்வோடு உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் உரிமைகளை வென்றெடுத்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மே தினமான இந்நாளில் உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடி அவற்றை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று, நாம் கண்டிருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், முதுகெலும்பான உழைப்பாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றி நினைவு கூறுவோம். “உழைப்பே உயர்வு தரும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

”எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வீர வரிகளின் மூலம் மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியவரும், தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவருமான புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று… எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என உரக்க முழங்கி தமிழாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் இனிமையை எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்ப் பணியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னரே கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நதிநீரில் தொடர்புடைய நான்கு மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகளை வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டுவதும், அதில் நதிநீர் விவகாரம் குறித்து விவாதிப்பதும் ஏற்புடையதல்ல. அதிலும், குறிப்பாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அம்மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.