கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு. அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் திரு. அமுதன் அவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும் மாணவர், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கு தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் மாணவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுப்பதில் எந்தவிதப் பயனுமில்லை.போதைப் பொருள் குறித்து மாணவர் திரு. அமுதன் அவர்கள் தெரிவித்த தகவலை ரகசியம் காத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே அதனைக் கசிய விட்டதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலே மாணவர் திரு. அமுதன் உயிரிழப்புக்கான காரணம் என அமைச்சரும் காவல்துறையினரும் பிரச்னையை மூடி மறைக்க முயல்கின்றனர் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர் திரு. அமுதன் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, இளைய சமுதாயத்தினரின் உடல்நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.