தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா? எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவரும், சிறைத் துன்பங்களையும், நோயின் வேதனைகளையும் தாங்கி நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவுதினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராக, எழுச்சியூட்டும் படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக, சொற்பொழிவாளராக எனப் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் மத்தியில் விடுதலைக்கான வேள்வியை விதைத்த போராளி சுப்பிரமணிய சிவா அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய திரு.ராகுல்காந்தி அவர்களை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ? 2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய திரு. ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினருமான திரு.பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களின் மகன் திரு P.உலகாதிபதி அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகனை இழந்துவாடும் திரு.பி.பெரியபுள்ளான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும். எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழக விளைநிலங்களுக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வபோது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி? எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.