பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.