தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சகாயம் அவர்கள் புகார் – தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை திமுக அரசும் அதன் முதல்வரும் புரிந்து கொள்வது எப்போது ? ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல் பாதுகாப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி விலக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு VAO திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் கொலையில் தொடங்கி புதுக்கோட்டையில் ஜகபர் அலி அவர்கள், திருநெல்வேலியில் ஜாஹிர் உசேன் அவர்கள் என தன்னலம் கருதாது இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படும் நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. மாவட்ட ஆட்சியராக, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளராக, சட்ட ஆணையராக திறம்பட பணியாற்றியதோடு பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பை தன்னிச்சையாக விலக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, விளம்பர மோகத்தை சிறிதுகாலம் ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஈரோடு அருகே தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் அடித்துக் கொலை – தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பல், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு பல்லடம் அருகே மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி அடுத்தடுத்து திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு குற்றச்சம்பவங்களின்றி அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் முழங்கிய அடுத்த இரு தினங்களில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் கொலை தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பழிவாங்கல், ஆதாயக் கொலை, முன்விரோதம் என அடுக்கடுக்கான காரணங்களை கண்டறிந்து சமாளிக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு என்ன காரணம் சொல்ல காத்திருக்கிறார் ?எனவே, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.