செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது. காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையைச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக்கான சாரம் சரிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில் இளம்பெண் ஒருவரை அவரது சகோதரியின் கண் முன்னரே காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.