தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா ? – திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா ? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை அரசு கலைக்கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் நாட்களிலாவது பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்துத் தூக்கி வீசும் அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – கொலையாளிகளும், கொள்ளையர்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும் ? சென்னை தரமணி அருகே, தன்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பலைத் தட்டிக் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கொலையான கணவர் மற்றும் குழந்தையின் உடல் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் வீசப்பட்ட மனைவியின் உடலை இரண்டாவது நாளாகக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன் மூலம் தமிழகக் காவல்துறை எந்தளவிற்குச் செயலிழந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதைத் தட்டிக் கேட்கச் சென்ற நபர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஆங்காங்கே வீசப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தை எட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளை குற்றவாளிகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குரூர மனம் படைத்தவர்களும், போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் சமூக விரோதிகளும் அச்சமின்றி சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இத்தகையச் செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத அளவிற்கான கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.