புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையிலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்துடன் நூற்றாண்டு கடந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கல்வி அறிவு, சுயமரியாதை எண்ணம், பகுத்தறிவு ஆகிய தன்மைகள் மட்டுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்றுரைத்து தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று. சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமதர்ம சமத்துவ சிந்தனை, என தான் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை உறுதியாக இருந்ததோடு, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.