தமிழக அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு அரங்கேற்றப்படும் அவலங்கள் – முழுவதுமாக செயலிழந்துவிட்ட சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சீரமைப்பது எப்போது ? ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் (Stecher) வழங்க அலைக்கழித்த காரணத்தினால், சிகிச்சைக்காக வந்த மூதாட்டியை அவரின் மகளே தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, என எழும் தொடர் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அலைக்கழிக்கப்படும் அவலச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருப்பதால் இனியும் அரசு மருத்துவமனைகளை நம்பி பயனில்லை என்ற சூழலுக்கு அடித்தட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச்சம்பவங்கள் – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது ?  சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளைதொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில்மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரைசரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்தஅதிர்ச்சியளிக்கின்றன.  தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும்கொலை, கொள்ளை, திருட்டு,போதைப்பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால்பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுவேமூன்றாண்டு கால திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சிறந்த உதாரணம்.  சட்டம் ஒழுங்குகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய காவல்துறையோ, குற்றச்சம்பவங்களுக்கும்தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல, ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஏவல்துறையாக மட்டுமேசெயல்பட்டுவருவது கடும் கண்டனத்திற்குரியது.  எனவே, ஆழ்ந்தஉறக்கத்தில் இருக்கும் காவல்துறையை இப்பொழுதாவது தட்டியெழுப்பி தமிழகத்தில்அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கைஎடுப்பதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் தமிழ்த்துறைகள் – தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உலகறிய உதவும் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஐதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பை பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அத்துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பஞ்சாப், லக்னோ, அலகாபாத், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை காரணமாக கொண்டு தமிழ்த்துறைகள் மூடப்படுவது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும் திகழும் தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, நாகரீகத்தை உலகறியச் செய்யவும், தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் அண்டைமாநில பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும். எனவே, நம் இனத்தின் அடையாளமான தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது – ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அச்சங்கம் தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு கலைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுய உதவிக்குழுக்களை அமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழிற்கடன் வழங்குதல் என பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வந்த தமிழ்நாடு நிலைத்த வாழ்வாதார சங்கம் திடீரென கலைக்கப்பட்டிருப்பதால், அதில் பணியாற்றி வந்த 50க்கும் அதிகமான பணியாளர்களுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. சுனாமி பேரலை தாக்கி ஆண்டுகள் பல கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மீள முடியாத சூழலில், தங்களின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த சங்கம், அரசின் கொள்கை முடிவு எனக்கூறி கலைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, 13 கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர அனுமதித்து, அத்திட்டத்தில் பணிபுரிந்த 50க்கும் அதிகமான ஒருங்கிணைப்பாளர்களோடு சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக செய்தி வெளியீடு : தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் புகழ்சேர்த்த பேரரசர், எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் தோல்வியே கண்டிராத மாவீரர், ஆளுமைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருச்சி ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி அதனை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – புதிய அணையை கட்டி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே ரூ.1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்ற அம்மாநிலத்தின் பிடிவாதப்போக்கு அறிவிப்பை மெத்தனப் போக்கில் எதிர்கொண்டதன் விளைவாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதி கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழு உறுதி செய்திருக்கும் நிலையில், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி புதிய அணை கட்டுவதோடு, ஏற்கனவே உள்ள அணையை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசால் தேனி,மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் கூட பதிவு செய்ய மறுக்கும் திமுக அரசாங்கத்தால், தொடர் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இதயதெய்வம் அம்மா அவர்களால் நிலைநாட்டப்பட்ட மாநில உரிமையும் பறிபோகும் சூழல் உருவாகியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கூட்டணி தர்மத்தை விட மக்களின் நலனும், மாநில உரிமையையுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, கேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்தி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் புகழ்சேர்த்த பேரரசர், எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் தோல்வியே கண்டிராத மாவீரர், ஆளுமைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று… வெற்றி பெற்றதற்கு பின்னர் சூட வேண்டிய வாகைப்பூவை, போருக்கு புறப்படும் போதே சூடிச்சென்று போர்க்களத்தில் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர் தஞ்சைக் கோன் பெரும்பிடுகு முத்திரையரின் புகழையும், பெருமையையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.