2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி, துரோணாச்சாரியார் விருதை வென்றிருக்கும் சதுரங்க பயிற்சியாளர் திரு.ஆர்.பி ரமேஷ், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை வென்றிருக்கும் தமிழக கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபாடி வீரர் பவன்குமார் ஷெராவத், இறகு பந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் உட்பட விருதுகளை வென்றிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு விளையாட்டுத்துறையில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் ரயில் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கனமழை காரணமாக வழித்தடங்கள் சேதமடைந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே 500க்கும் அதிகமான பயணிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 24 மணி நேரங்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் சிக்கியிருப்பதால் அவர்களுக்கான அவசர கால மருத்துவ உதவியை ஏற்படுத்தி தருவது இந்த நேரத்தில் அவசியமாகிறது. ஆகவே, அவசரகால மருத்துவக்குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, ரயிலில் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கனமழையால்பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களைமுழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது அன்புவேண்டுகோள்.  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடிமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், சாலைகளிலும் குடியிருப்புகளிலும் வெள்ள நீர்புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கியுள்ளது.  ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயேமுடங்கியிருக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், என அனைத்து தரப்பு மக்களையும் தகுந்தபாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவஉதவிகளை செய்திடுமாறு கழகத்தினரை இந்நேரத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது. அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் புகுந்திருக்கும் மழைநீர் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர். தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பங்கிங்காம் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் மழைநீரில் CPCL நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் கடல்வளம் மட்டுமல்லாது பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எர்ணாவூர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களால் சுவாசிக்கவே சிரமமாக இருப்பதாகவும், அதனை அகற்ற இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வடசென்னை பொதுமக்களையும், கடல்வளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி உள்ளூர் மீனவர்களை ஈடுபடுத்தியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலின் மேற்பரப்பு பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டாலும் அதனுடைய தாக்கம் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும், அதுவரை மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். எனவே, எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கூடுதல் எண்ணெய் மிதவைகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் 17ஆம் தேதிக்குள்ளாக எண்ணெய் படலங்களை அகற்றும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் 140 பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140 பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்களை பதிவு செய்துள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்கள், பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கிய இந்த பொன்னான திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் சரிவர செயல்படுத்தாத திமுக அரசின் அலட்சியப் போக்கால், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களில் முறையாக செயல்படுத்துவதோடு, மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று எனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், பிற மாவட்டங்களில் முதியோர் மற்றும் ஆதவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களில் நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் அன்னதானத்தையும் கழகத்தினர் வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. என்னுடைய பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு செய்திருக்கும் இந்த உதவி எந்நாளும் தொடர வேண்டும் என்பதை இந்நேரத்தில் கழகத்தினருக்கு அன்பு வேண்டுகோளாய் வைக்கின்றேன்.

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச்சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.