தமிழகத்தில் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் – மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தபின்பு மின் கட்டணத்தை உயர்த்துவதில் குறிக்கோளாய் இருந்து அதனை செயல்படுத்திய திமுக அரசு, பொதுமக்களை பாதிக்கும் மின்வெட்டைப் போக்கவோ, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்வதோடு, மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கா, மலேசியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போட்டியில், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கும் மாணவ, மாணவியர்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் அமமுக 27வது வார்டு கழகச் செயலாளர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மகள், மாணவி ரிதன்யா அழகுநாச்சியார் அவர்கள் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களின் தனித்துவமிக்க திறமையால் சிங்கப்பூர் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்தடுத்து நிகழும் உலகளவிலான யோகா போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தனசிங் அவர்கள், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்த 30 ஆம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. பலமுறை சுட்டிக்காட்டியும், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக, தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியாவது பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு, திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும், குறைந்துவரும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டத்தினாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை, கோவை, மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டிக்கும் வகையில் காலிக்குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு பொதுமக்கள் அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுடன் பெயரளவுக்கு ஆலோசனக் கூட்டங்கள் நடத்துவதுதோடும், நிதி ஒதுக்குவதோடும் மட்டுமே தன் கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நிதி ஒதுக்கப்பட்டதற்கான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யாமல் இருப்பதே, தற்போது மக்கள் பெருமளவு பாதிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வாரியம் விநியோகிக்கும் நீரின் அளவுக்குமான பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன. பொதுக் குழாய்கள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஏழை, எளிய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில் நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி, பராமரித்து எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான சூழல்களிலும் துணிச்சலுடன் பணியாற்றி மக்களுக்கான நடுநிலை செய்திகளை வழங்கி வரும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாளில், உலக நாடுகளை செய்திகள் மூலம் இணைக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை பேணி காக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.குமார் அவர்கள், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது. மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதோடு, மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோடை கால வெயில் தாக்கத்திலிருந்து பறவைகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் – வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு தீவிர வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தை மனிதர்களே சமாளிக்க முடியாத நிலையில், வனப்பகுதிகளிலும், சரணாலாயங்களிலும் வாழ்ந்து வரும் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தங்களின் உணவு மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும் வறண்டு போய் இருப்பதாலும், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலும், போதுமான தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகளுக்கு உடல்ரீதியாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களில் வனத்துறை சார்பாக சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து, அதில் போதுமான அளவு தண்ணீரை தேக்கிவைத்து, கோடைவெயிலில் சிக்கித் தவிக்கும் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் தாகத்தை போக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும். கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படாது என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியையும் மீறி தற்போது நடைபெறும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் 298 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் அரசின் சிறப்பு உதவித்தொகையுடன் கூடிய கல்வி பயின்று வரும் நிலையில், அதனை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை அம்மாணவ, மாணவியர்களுக்கான சலுகைகளை பறிப்பதோடு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சீர்குலைப்பதாகும். எனவே, சிறுபான்மை சமூகமான பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயலான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, சீர்மரபினர் நலச்சங்கத்தின் கோரிக்கையின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழாகவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.