August 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காத திமுக அரசு – ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கும் திமுக அரசு, கடந்த மூன்றாண்டுகளில் 892 பேருந்துகள் மட்டுமே வாங்கியிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதும், ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் பாகங்கள் கழண்டு விழுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், அப்பேருந்துகளில் பயணிக்கக் கூடிய பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப்போக்குவரத்துக் கழகங்களில் இயங்கிவரும் ஒட்டுமொத்த பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகள் காலாவதியான நிலையில், அதனை சீரமைக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 2022-23 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும், 2024 -25 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காதது ஏன் ? நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தொழிற்சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட போக்குவரத்துத்துறையில் நிகழும் நிர்வாக சீர்கேடுகளை களைவதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து! உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “நான் அனைத்து உயிர்களிடத்தும் சமமானவன், எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்” என்று பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எடுத்துரைத்த வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றிட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில் தர்மம் செழிக்கவும், அறம் வளரவும், அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும் மீண்டும் ஒருமுறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
August 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவரும், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு ஓமந்தூரார் என அழைக்கப்படக் கூடியவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவுதினம் இன்று. பணம், பதவி, அதிகாரம் என எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு எண்ணற்ற சட்டங்களை இயற்றியதோடு, அரசியலில் நேர்மைக்கும் தூய்மைக்கும் அடையாளமாக திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களை நினைவில் கொண்டு போற்றுவோம்…
August 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பத்திருக்கும் கர்நாடக அரசு – காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் விண்ணப்பதை மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளையும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான முக்கியமான காலகட்டத்தில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசாலும், தமிழகத்திற்கான நீரை கேட்டுப் பெற முடியாத திமுக அரசாலும் தமிழகத்தின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தின் உயிர் நாடியாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
August 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியாய விலைக்கடைகளில் மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு – சாமானிய பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பருப்பு மற்றும் பாமாயிலுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நியாய விலைக்கடைகளில் பருப்பு, மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு எழுந்த நிலையில், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசால் ஏழை, எளிய பொதுமக்கள் தற்போது மீண்டும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப்படுவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வந்த பாமாயில் மற்றும் பருப்பு விநியோகத்தையும் நிறுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பாமாயிலை வாங்குவதற்காக நியாய விலைக்கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு சிலர் நியாய விலைக்கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 22, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வந்தாரை வாழ வைக்கும் சென்னை எனும் மாநகரம் உருவான தினத்தை கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது சென்னை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கல்விக்காக, வேலைக்காக, எதிர்காலத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு இளைஞர்களின் முகவரியாக திகழும் சென்னை மாநகரத்தை இந்நேரத்தில் போற்றிக் கொண்டாடுவோம்.
August 22, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு – சாமானிய மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றும் தூய்மைப் பணியாளர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி என அரசு மருத்துவமனைகளின் அவலநிலை குறித்து நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களை, தனியார் மருந்தகங்களில் இருந்து ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வரச் சொல்லி அலைக்கழிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அரசு மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு தொடர்பாக எழும் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும், அதனைப் போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மருத்துவத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விளம்பரத்தில் மட்டுமே குறியாய் இருக்கும் திமுக அரசால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரவே அச்சப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகரில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம் – பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறையால் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் விழுந்து காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு முறையான முன்னறிவிப்பின்றியும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றியும் நடைபெறும் சாலைப்பணிகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியப் போக்குடன் செயல்படும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மற்றம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 துக்ளக் இதழின் நிறுவனரும், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மறைந்த திரு. சோ இராமசாமி அவர்களின் மனைவி திருமதி. சவுந்திரா ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். திருமதி.சவுந்திரா ராமசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
August 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான துயரம் – விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படை (NCC) எனும் பெயரில் நடைபெற்ற போலி முகாமில் பங்கேற்ற 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கபட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவருக்கும் தேசிய மாணவர் படை(NCC)க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும் அவர் போலி பயிற்சியாளர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய மாணவர் படை முகாம் எனும் பெயரில் போலி முகாம்களை நடத்தி அதன் மூலம் பள்ளி மாணவியை வன்கொடுமைக்குள்ளாக்கிய சிவராமன் என்பவருக்கு, தனியார் பள்ளியில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் என பலர் உடந்தையாக இருந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும்காலங்களில் இதுபோன்ற போலி முகாம்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.