திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.பரம்பிகுளம் – ஆழியாறு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியில் கடைமடையாக உள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததன் விளைவே, கால்நடைகளோடும், விவசாய உபகரணங்களோடும் விவசாயிகள் மறியலில் ஈடுபடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும், கடைமடை பாசனத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் நலனை காக்கிறோம் எனும் பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களை கையகப்படுத்துவதையும், தடுக்க முற்படும் விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவுவதையுமே வாடிக்கையாக கொண்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். எனவே, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது. தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1, 177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை – குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.ஏற்கனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு, காவலர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, பெருகிவரும் குற்றச்சம்பவங்கள் ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் காவலர்களுக்கு திமுக அரசு பிறப்பித்திருக்கும் இந்த புதிய அரசாணை கூடுதல் மன உளைச்சலை அளித்திருப்பதோடு, அவர்களின் பணித்திறனை மேலும் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கோவையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக இருவர் கைது – தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பு உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக அக்கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் மூலம், அச்சம்பவத்தை சாதாரண விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற திமுக அரசின் உண்மையான முகம் அம்பலப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தின் போது நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்றும் நீங்காத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரின் புதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றிருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்குகிறதா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஏற்கனவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலையில், காவல்துறையை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசு, தற்போது, தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சி நிறைவடையும் தருவாயிலாவது விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாத செயல்கள் வேரூன்றாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் அலட்சியம் இனியும் தொடருமேயானால் 2001 ஆம் ஆண்டு மக்களே வெகுண்டெழுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் – தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் திமுகவின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.கட்டுமானப் பணிகளின் போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.