தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்து மூன்றே நாட்கள் ஆன புதுமண தம்பதியை வீட்டிற்குள் நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கமே முக்கிய காரணம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதும்; பொதுமக்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தீமை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை என்பதை இனியாவது திமுக அரசு உணர வேண்டும். எனவே, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு, இந்த இரண்டு கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்துகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பிரச்னைக்குரிய அரசாணை எண் 149ஐ ரத்து செய்வதற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதே அரசாணையின் படி 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கை எண் 177ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் தற்போது நடைபெற்றுள்ள இந்த விபத்தினால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை உணர்ந்து, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீனவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கக் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரான பின் பலமுறை மனு அளித்தும் தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.