March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் – திமுக ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “எனது ஆண்கள்” என்ற நூலின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் பற்றாளராக, கல்லூரி பேராசிரியராக, சிறந்த மொழி பெயர்ப்பாளராக என பன்முகத் திறமையின் மூலம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பேராசிரியர் ப.விமலா அவர்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பணி மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் புதிய உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு அணையை கட்டி தென்மாவட்டங்களில் வறண்டு கிடந்த விவசாய நிலங்களை தன் தொலைநோக்கு சிந்தனையின் மூலம் வளம்பெறச் செய்த மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. சோதனைகள் பல சூழ்ந்த நிலையிலும், முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடிப்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
March 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தில் மகளிர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு பிறப்பளிக்கும் அன்னையாக, தோழியாக, தங்கையாக, மனைவியாக, மகளாக என வாழ்க்கையின் அனைத்துவித பரிமாணங்களிலும் இன்றியமையாத அர்ப்பணிப்பை வழங்கிவரும் மகளிர் ஒவ்வொருவரின் மகத்துவமிக்க பங்களிப்பை நாம் அனைவரும் போற்றி வணங்கிடுவோம். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் காவல்நிலையங்கள் என இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நன்றி உணர்வோடு இந்நாளில் நினைவு கூர்வோம். சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில், அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை தன்வசப்படுத்தி வெற்றியுடன் கூடிய புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
March 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தி.மு.க அரசு இன்று அழைத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென்சென்னை மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன் அவர்கள் கலந்து கொண்டு, கழகத்தின் நிலைப்பாட்டை கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
March 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை தன் சொந்த செலவில் செலுத்தும் தலைமை ஆசிரியர்கள் – மின்கட்டணத்தை கூட செலுத்த முடியாத பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி உயர்த்தப் போகிறது? தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான நிதி தற்போது வரை ஒதுக்கப்படவில்லை என நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசுப்பள்ளிகளுக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள், அலுவலர் பயணப்படி, மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பிப்ரவரி மாதம் ஒதுக்க வேண்டிய நிதி தற்போதுவரை ஒதுக்கப்படாத காரணத்தினால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்த பணத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான வகுப்பறைகள் என ஏற்கனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அக்கல்வியை பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளை கூட ஏற்படுத்தித் தராமல் , அதற்கு மூடுவிழா நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற கால தாமதங்கள் ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்ற கொள்கை உணர்வோடு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடி தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினம் இன்று. பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமைகள் கொண்டவர்கள் என முழங்கி, விளிம்பு நிலை மக்களுக்கும் சமூகநீதியை பெற்றுத்தந்த பெருமைக்குரிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில், அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
March 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வை எந்தவித பதற்றமுமின்றி, நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, அவரவர் விரும்பிய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடர மாணவ, மாணவியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 2, 2025 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இன்று முதல் ரம்ஜான் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதத்தில் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் பெருகிட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.