August 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் பார்க்கிங் திரைப்பட குழுவினருக்கும், அத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களின் திரைப்பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் விரிவான விசாரணையின் மூலம் மாணவர்களின் மரணங்களில் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் இதே அரசு மாதிரிப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பன்னிரெண்டாம்வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் சந்தேகத்தை வரவழைக்கிறது.கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற இரு மர்ம மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பள்ளி நிர்வாகமோ, அது குறித்து எந்தவித விசாரணையையும் நடத்தாமல் மாணவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்களைத் தற்கொலை எனக்கூறி மூடிமறைக்க முயல்வதாகப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சொந்த தொகுதியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அதிநவீன வசதிகளுடன் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் பதற்றமடையச் செய்திருக்கிறது. எனவே, துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே,காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியாத திமுக அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது.
July 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் நிசார் செயற்கைக் கோள் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விதமான தரவுகளை வழங்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
July 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கள்ளர் விடுதிகளின் பெயரைச்சமூகநீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு -கள்ளர் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், கள்ளர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.கள்ளர் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், எதிர்கால நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும், விடுதிகளை சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதும் அதன் தனித்துவத்தை இழக்கும் என்பதோடு அவர்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான அரசு கள்ளர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத திமுக அரசு, அவற்றின் பெயரை மாற்றத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்திருப்பது அச்சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சேதமடைந்த கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற இருப்பிடம் என அவலமாகக் காட்சியளிக்கும் விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாத திமுக அரசு, விடுதிகளின் பெயர்களை மட்டும் சமூகநீதி விடுதிகள் என மாற்றுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கள்ளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவதோடு, அவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 28, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் (FIDE) ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்களுக்கும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் கோனேரு ஹம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலக செஸ் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
July 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான சோழப் பேரரசர்களுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் – வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததோடு, மாமன்னர்கள் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். எதிர்கொண்ட போர்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னர் ராஜராஜசோழன், இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான பேரரசர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக் கொண்டாடும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நீண்ட கால கோரிக்கையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
July 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய குடியரசு முன்னாள் தலைவரும், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆகிய முப்பெரும் துறைகளில் முத்திரை பதித்த விஞ்ஞானியுமான பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே இலக்காக நிர்ணயித்து தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதோடு, இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நாட்டு மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.
July 26, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு – காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு .ராஜாராமன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பட்டப் பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. எனவே, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாராமன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.