May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கின் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த ஓரிரு தினங்களில் விசாரணை அதிகாரி மாற்றம் – குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை ? ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவங்களை செய்தாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட அதே கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது யார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய முடியாத காவல்துறை, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தியதற்கும், சென்னிமலை மற்றும் ஒட்டன் குட்டையில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் எனக்கூறி 11 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படும் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்கில், தங்கள் மீதான அவப்பெயரை போக்க அப்பாவி மக்களை வற்புறுத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தை பெற்று அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறதா ? இதுவரை எத்தனை கொலை வழக்குகளில் இது போன்ற அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் தற்போது எழுகிறது. மேலும், சென்னிமலை மற்றும் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி 11 பேரை சிறையில் அடைத்த விசாரணை அதிகாரி திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள், சிவகிரி கொலை வழக்கு குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த அடுத்த ஓரிரு தினங்களில் மாற்றப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த திரு .ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முதல், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ஜெயக்குமார் தன்சிங் வரையிலான முக்கிய பிரமுகர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என பெருமை பேசுவது வெட்கக் கேடானது. எனவே, வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றிவிட்டால் வழக்கு விசாரணை முடிந்து விடும் என தப்புக் கணக்கு போடாமல், சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் தானா ? என்பதை விரிவாக விசாரிப்பதோடு, காவல்துறை மீதான அழுத்தத்தை குறைக்க பொய்வழக்கில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களின் சகோதரி திருமதி.சரோஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சகோதரியை இழந்து வாடும் திரு.வைகோ அவர்களுக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து பேச்சுவார்த்தையை புறக்கணித்த 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் – போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான திமுக அரசின் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தி.மு.க கூட்டணி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ உட்பட 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.15 முதல் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கோரிய தொழிற்சங்கத்தினருக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியதோடு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததே பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.அதிலும், 01.09.2023 முதல் 6 சதவிகிதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மொத்தமாக வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையில் 12 மாத நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியிருப்பது ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாமக்கல் அருகே திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த உயர்மட்ட மேம்பாலம் – பாலத்தின் தரத்தை முழுமையாக பரிசோதிக்கும் முன்பு அவசரகதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன? நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலமாக இன்று திறந்து வைக்கப்பட்ட 3.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த மேம்பாலப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகாருக்கு, திறக்கப்பட்ட முதல் நாளே ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்திருப்பது தமிழக அரசு மேற்கொள்ளும் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மாநிலத்தில் சேதமடைந்த மேம்பாலங்களை சீரமைக்கவும், புதிய மேம்பாலங்களை கட்டவும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? பாலத்தின் தரத்தை உறுதி செய்யாமல் அவசரகதியில் பாலம் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சீரமைப்பதோடு, பாலத்தின் தரத்தை முழுமையாக ஆராயாமல் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
May 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவருமான நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.திரைப்பட நடிகராக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்த திரு.ராஜேஷ் அவர்களை இழந்துவடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் சகோதரர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சகோதரர் திரு.எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
May 28, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் திரு.பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும், 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் திரு.செர்வின் சபாஸ்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
May 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் சூழலில் கோவை மற்றும் நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் கணித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே நொய்யல், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கனமழையால் மக்கள் பாதிக்கப்படும் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாகையில் பெய்த தொடர்மழையால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு பயிர்கள் சேதம் – உரிய இழப்பீடை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கிழ்வேளூர் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு, உளுந்து உள்ளிட்ட தானிய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாறு காணாத வறட்சி, பருவம் தவறி பெய்யும் தொடர்மழை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கை பேரிடர்களை சந்திக்கும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கூட இழப்பீடு வழங்கி உதவ முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாலும், அதற்கென பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதால் என்ன பயன் ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய முறையில் கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
May 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தங்க நகைக்கடன் பெறுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ரிசர்வ் வங்கி – ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவசரகால நேரத்தில் பேருதவியாக இருக்கும் நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும். தங்க நகைக்கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க தங்க நகைக்கான கடன் அளவு 75 சதவிகிதமாக குறைப்பு, சொந்த நகை என்பதற்கான உரிய ஆதாரம், 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில்துறையினர் தங்களின் அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதும், பின்னர் படிப்படியாக பணம் கட்டி திருப்பிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வேளாண்குடி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலம் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தங்க நகைக்கடன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இக்கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும் வலியுறுத்துகிறேன்.