சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவா ? – சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே,சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும். வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் – விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது. மன தைரியமிக்க திரு.மாரிமுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் அருகே கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்கள் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, திரு.மாரிமுத்து அவர்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.