August 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு இல.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு திரு.இல கணேசன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
August 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான், எனது என்ற பற்றை நீக்கி இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவதோடு, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம். உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவான் பிறந்த இந்நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
August 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதிக்கக் கொடுமையிலிருந்தும் அந்நிய பிடியிலிருந்தும் இந்தியத் திருநாட்டை விடுவிப்பதற்காகவும், மக்களின் பிறப்புரிமையாம் சுதந்திரத்தை அடைவதற்கும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம்.
August 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீர்வு எட்டப்படாமலே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கிய திமுக அரசின் ஈவு இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த அறவழி தொடர் போராட்டம் தீர்வு காணப்படாமலேயே திமுக அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகரின் தூய்மையைப் பேணிக்காப்பதிலும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதிலும் பெரும்பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற திமுகவின் 285வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை ரிப்பன் மாளிகையின் வாயிலில் வாழ்வாதாரத்திற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைத் தடுத்து நிறுத்தியதோடு, மாநகராட்சியின் கழிவறைகளைக் கூட பயன்படுத்த அனுமதி மறுத்த திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது ஆணவப்போக்கின் உச்சபட்சமாகும்.அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கட்டாயப் படுத்தியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தேர்தலுக்கு முன்பாக வழங்கிய 285வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் – வைகை அணையிலிருந்து நிரந்தரமாகத் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என ஒட்டுமொத்த மக்களும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கால் நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற 58 கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்பட்டிருப்பதோடு, நிலத்தடி நீர் சரிந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தால் மட்டுமே 58 கால்வாய் மதகு பகுதியைத் திறக்க முடியும் என்ற நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவால் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான நீரைப் பெற பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, உசிலம்பட்டி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் வைகை அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதோடு, ஆண்டுதோறும் உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளையும் தனியார் மயமாக்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனில்லாத நிலையில், வேறு வழியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பத்து நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து எங்களது முழு ஆதரவைத் தெரிவித்தோம். 12 நாட்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மேலும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
August 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நிதி நெருக்கடியை காரணம் காட்டி அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா? – தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு வருடந்தோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடநூல்கள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிதி நெருக்கடி எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவால் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்காலம் நடைபெற்று வருவதாக மேடைதோறும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை கூட விலையில்லாமல் வழங்க மறுத்திருப்பது தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சரின் புகழ்பாடவும், அவர் செல்லும் இடங்கள் எல்லாம் விளம்பரம் செய்யவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்யும் போதெல்லாம் ஏற்படாத நிதி நெருக்கடி, அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது மட்டும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வழக்கம் போல அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலைமுரசு நிறுவனருமான திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று. தந்தையின் வழித்தடத்தைப் பின்பற்றி தமிழ் மீதும் தமிழக மக்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டு பத்திரிகை உலகின் ஜாம்பாவானாக திகழ்ந்த திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம்.