January 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அறவழியில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி மறுப்பு – விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் நரசிங்கப்பட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் ஒன்று திரண்டு நடத்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சிகள் நடத்தும் அறவழிப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தலைவர்களை கைது செய்த நிலையில், மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக திமுக இன்று நடத்திய போராட்டத்திற்கு மட்டும் இரவோடு, இரவாக அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முழுவதும் திமுகவின் கைப்பாவையாகவே மாறிவிட்டதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என சட்டமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்த பின்னரும் மக்களின் போராட்டம் தொடர்வது தங்களின் மீதான நம்பிக்கை இல்லாததே காரணம் என்பதை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போது உணர்வார் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழர்களின் பாரம்பரியத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி மதுரை மக்கள் நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கு உரிய அனுமதியை வழங்குவதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
January 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக வந்த நபர் உயிரிழப்பு – அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரையிலான அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் தொடர் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரத்தில் ஆய்வு எனும் பெயரில் சுமார் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அங்கு மருத்துவர்கள் இருக்கிறார்களா ? என்பதை உறுதி செய்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனைகளின் மீது இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்குவதோடு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 7, 2025 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களை, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் டிரஸ்டி ஸ்தானீகம் சொக்கலிங்கத் தம்பிரான் அவர்கள் நேரில் சந்தித்து திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழை வழங்கினார்கள்.
January 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உட்பட தமிழகத்தில் அடியோடு சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் – திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதிர்வலைகளை திசை திருப்பவும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் தினந்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை மூடி மறைக்கவுமே திமுக இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, அதில் பங்கேற்க வந்த தலைவர்களையும் வழிமறித்து கைது செய்த காவல்துறை, இன்று திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரையும் கைது செய்யாதது ஏன் ? திமுகவை சார்ந்தவர்களே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், குற்றச்சம்பவங்களுக்கு துணைபோவதாகவும் சொல்லப்படும் சூழலில், அனைவருக்கும் பொதுவான காவல் துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, அக்குற்றசம்பவங்களில் இருந்து திமுகவினரை பாதுகாப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு எதிரான நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கும் திமுக நடத்தும் இதுபோன்ற அரசியல் கபட நாடகங்களை உன்னிப்பாக கவனித்து வரும் தமிழக மக்கள் விரைவில் அதற்கான எதிர்வினையை ஆற்றுவார்கள் !
January 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எள் அளவும் உண்மையில்லாத ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராத ஆளுநரின் உரை; தமிழக மக்கள் ஒவ்வொருவரும் புறக்கணிக்க வேண்டிய கற்பனைக்கும் எட்டாத திமுக அரசின் கட்டுக்கதை !
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல அணு விஞ்ஞானியும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவருமான விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதத் திறனை மேம்படுத்தியதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொடர் கதையாகிவரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பசுமையான சூழலை பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் அறிவுறுத்திய இரண்டு மாதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்ற இணைப்பு நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளையும் விரிவாக்கம் செய்திருப்பதோடு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளையும் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பொதுமக்களிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராமசாலை திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் ஊராட்சிகள் தற்போது நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கிராமப்புற ஊராட்சியாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சியாக மாறியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும், சிறு வியாபாரிகளும் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும், வரிகளாலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது இணைக்கப்படும் ஊராட்சிகளுக்கும் அதே பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, அவசரகதியில் நடைபெற்றிருக்கும் இணைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதோடு, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பே இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) எனும் புதிய வகை பாக்டீரியா தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை திமுக அரசு பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நாள்தோறும் 10 முதல் 20 பேர் தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் போன்ற நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து விதமான அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவும், போதுமான மருத்துவர்களும் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தும் இந்நேரத்தில், புதர் மண்டிய வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
January 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி இயங்கும் சட்டவிரோத தனியார் மதுபானக்கடைகள் மற்றும் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்கள் விற்பனை – மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலை 8 மணி முதலே தங்கு தடையின்றி மதுபான விற்பனை நடைபெறுவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மாதவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து இருந்து 4 கிலோ போதைப் பொருளோடு 5 நாட்டுத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படியாக, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கொடியவகை போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் ஏராளமான இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தையும் தொலைத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமான சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்வதாக விளம்பரத்தில் மட்டும் கோருவது எந்த வகையில் நியாயம் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதோடு, போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.