சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் சார்பாக 10 இடங்களில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகளைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிப்பது இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியாகும். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவில் தொழிற்சாலைகளை காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் விடுபட்ட காரணத்தினால் அப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.