தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மொழியால் வேறுபட்டிருந்தபோதிலும் வணிகம், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியம் ஆகிய தொடர்புகளுடன் தென் இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் நம்முடன் ஒன்றுபட்டிருக்கின்றனர். யுகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில் இப்போது போல எப்போதும் எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க விரும்புகின்றேன்.

பெண்காவலர்களுக்கான பொன்விழா ஆண்டை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டபோதிலும், அதில் பெண்காவலர்கள் பணியிடத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர்கள் சக ஆண் காவல் உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. விசாரணைக்குச் செல்லும் இடங்களிலும், அரசியல் பொதுகூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிகளுக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் பெண்காவலர்களை காக்க வேண்டிய அரசானது, இத்தகைய கொடுமைக்கு உள்ளாகும் பெண்காவலர்களை பாதுகாக்கும் நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல. பெண்காவலர்களை வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆராய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து பரிந்துரைகளைப் பெற்று அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களை அரசு அதிகாரிகளோ, தொகுதியின் திமுக எம்எல்ஏவோ இதுவரை சந்தித்துப் பேசாதது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பிரசவம் போன்ற அவசரகால மருத்துவ தேவைகளுக்கு 10 கி. மீ தொலைவில் உள்ள மன்னார்குடி அல்லது உள்ளிக்கோட்டைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ தனது வாக்குறுதியில் கூறியபடி பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டவும், ஆம்புலன்ஸ், படுக்கை வசதிகள், மருத்துவமனை உபகரணங்கள் கிடைக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சென்னையில் பால்வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதையடுத்து பால் நிறுத்தப் போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால்நிறுத்தப்போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போர் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீர்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர். தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதில் வெளிப்படை தன்மை இல்லை. அரசு துறைகளில் முழுமையாக லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், சோதனைக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள், துறைகளின் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.