முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும் – முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது. மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் துரோகம் ஆகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு சரித்திர வெற்றியை பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 309 ஐ நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத நிலையில், ஆசிரியர்களை கொண்டாடி மகிழ வேண்டிய தினத்தன்று ஆசிரியர்கள் அனைவரும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பெரும்பாலான சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்றாண்டுகளை கடந்தபின்பும் அதனை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் செயல்படுத்த மறுப்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அவனி லெகரா அவர்களுக்கும் அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மோனா அகர்வால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு – விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அப் பல்கலைக்கழகங்களில் உயிர்கல்வி பயிலும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.