துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இந்திய சுதந்திரப் போருக்கு முன்பாகவே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி முதல் போர் பிரகடனம் அறிவித்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று. தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து இறுதிவரை போரிட்டு வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர்கள் மருதுசகோதரர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் – தூய்மைப் பணியாளர்களின் அருகில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்கள் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மாநிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு, பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. நிரந்தர பணி பாதுகாப்பின்றியும், போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றியும் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு அருகில் அமர்ந்து உணவருந்துவது போன்ற புகைப்படங்களை எடுத்துக் கொள்வது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட எந்த வகையிலும் உதவாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட முறையாக நிறைவேற்ற முன்வரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதோடு, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்த மாணவர்கள் கைது – தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கொடுங்கையூர் அருகே வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நாள்தோறும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான செய்திகளையும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும் திமுக அரசு கண்டு கொள்ளாததன் விளைவே, கல்லூரி மாணவர்கள் தங்களின் வீட்டிலேயே போதைப்பொருளை தயாரிக்கும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசி, போதை மாத்திரைகள், போதை மிட்டாய்கள் உள்ளிட்ட போதை வஸ்துகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்டை மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் – நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்க முன்வராத திமுக அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அப்பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்தே இயக்க முயற்சிப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் வரிசையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.