விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக SpaDeX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ் இரண்டு விண்கலன்களை பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியில் ஆய்வு மையம், சந்திரயான் 4 போன்ற இந்தியாவின் எதிர்கால லட்சியத் திட்டங்களுக்கு முன்னோட்டமான SpaDeX திட்டத்தினை தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரொக்கப்பணம் இல்லாத தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம் – எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்க மறுத்திருப்பது, அதனை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்து விட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குடும்பத்தலைவிகளை ஏமாற்றிய திமுக அரசு, தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் ரொக்கப்பணம் வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. பால் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் உயர்வு, சொத்துவரி, தொழில்வரி, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம், கட்டட அனுமதிக்கான வரைபட கட்டணம், வழிகாட்டி மதிப்பு என அனைத்து விதமான கட்டணங்களையும் வரிகளையும் ஆண்டுக்கு பலமுறை உயர்த்தும் திமுக அரசு, ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணத்தை சேர்த்து கொடுக்க முடியாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதோடு, அனைத்து மக்களுக்கும் அந்த பணம் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயனற்று இருக்கும் இதய தெய்வம் அம்மா அவர்களின் பெயரிலான விளையாட்டு அரங்கம் – விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. சென்னை அண்ணாநகர் மண்டலம் கீழ்ப்பாக்கம் பகுதியில் இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் முறையான பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு பயன்பாடின்றி பூட்டியே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு மைதானங்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், உள் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்குமிடம்,பார்வையாளர்கள் மாடம் என அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மைதானத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பூட்டியே வைத்திருப்பது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி,அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உடற்பயிற்சிக் கூடம் என மக்கள் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது அவரின் பெயரிலான விளையாட்டு அரங்கத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடியே வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்தவகையிலும் பயன்படாத சர்வதேச கார் பந்தயம் நடத்துவதற்கும், விளம்பரத்திற்காகவும் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடிக்கும் திமுக அரசு, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உகந்த இடமான இந்த மைதானத்தை சீரமைக்க தயங்குவது ஏன்? என்ற கேள்வியை விளையாட்டு வீரர்கள் எழுப்புகின்றனர் எனவே, விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாழடைந்த நிலையில் பயன்பாடற்று கிடக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரிலான விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பதோடு, அதனை விரைவாக விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை விருகம்பாக்கத்தில் அனுமதியில்லா இடத்தில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய காட்சிகளை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி பொதுமக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய முதலமைச்சருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும்? சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சரின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பை வீசி மண்ணை தூற்றிய வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனையையும் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சமூக வலைத்தளங்களில் அரசையும், முதல்வரையும் விமர்சிப்போரை தேடித் தேடி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பால் விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி பொதுமக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி, தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட போராடும் சூழலை உருவாக்கிய முதலமைச்சர் மீது மண்ணை தூற்றி வீசாமல் மாலை அணிவித்து பாராட்டு விழாவா நடத்த முடியும் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, சம்பந்தப்பட்ட மூதாட்டி மீதான புகாரில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது புகார் – கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த தயங்குவது யாரை பாதுகாப்பதற்காக ? திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அக்கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பு முதல்வர் மீதும், பல்வேறு துறைகளின் தலைவர்களின் மீது மாணவிகளே அளித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, துணைமுதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்திருக்கும் நிலையில், அந்த புகாரின் மீது குறைந்தபட்ச விசாரணையை கூட நடத்த மறுப்பது யாரை பாதுகாப்பதற்காக ? என்ற கேள்வி எழுந்துள்ளது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்த பின்னரும் கண்டும் காணாதது போல திமுக அரசு கடந்து செல்வதும் உயர்கல்வி பயிலவே அச்சப்படும் சூழலை உருவாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் உட்பட பல்வேறு துறைத்தலைவர்கள் மீது மாணவிகள் அளித்திருக்கும் புகார் மீது தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பத்ம பூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை மாவட்ட கழக செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சமூக நல வாரிய தலைவருமான செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.P.ஆனந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.