August 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும். வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 3, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 06.08.2025, புதன்கிழமையன்று மாலை 4 மணியளவில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள PP மஹாலில் நடைபெறவுள்ளது. – தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
August 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சங்க காலத்தில் கொடையில் சிறந்து விளங்கிய கடையேழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான வல்வில் ஓரியின் பெருவிழா இன்று. தனது வில் ஆற்றலாலும், ஈடு இணையற்ற கொடைத் தன்மையாலும் வரலாற்றில் எந்நாளும் நிலைத்து நிற்கும் வள்ளல் வல்வில் ஓரியின் புகழையும், பெருமையையும் போற்றிக் கொண்டாடுவோம்.
August 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விடுதலைப் போரில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கிப் போராடிய மாவீரரும், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை எனப் போற்றப்பட்ட மாமன்னருமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று. தேசத்தின் விடுதலைக்காக இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்து தன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரத் தமிழர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
August 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
August 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் – விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது. மன தைரியமிக்க திரு.மாரிமுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் அருகே கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்கள் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, திரு.மாரிமுத்து அவர்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் பார்க்கிங் திரைப்பட குழுவினருக்கும், அத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களின் திரைப்பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மன்னர் தீரன் சின்னமலை நினைவு தினம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் மரியாதை செலுத்துகிறார்கள்.
August 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் விரிவான விசாரணையின் மூலம் மாணவர்களின் மரணங்களில் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் இதே அரசு மாதிரிப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பன்னிரெண்டாம்வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் சந்தேகத்தை வரவழைக்கிறது.கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற இரு மர்ம மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பள்ளி நிர்வாகமோ, அது குறித்து எந்தவித விசாரணையையும் நடத்தாமல் மாணவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்களைத் தற்கொலை எனக்கூறி மூடிமறைக்க முயல்வதாகப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சொந்த தொகுதியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அதிநவீன வசதிகளுடன் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் பதற்றமடையச் செய்திருக்கிறது. எனவே, துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே,காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.