கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது – பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாநிலத்தின் தலைநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் நடைபெற்றிருக்கும் இந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என பெயரளவில் சொல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொதுமக்கள் பாதிப்பு – அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்போடு வழங்க வேண்டிய விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாத காரணத்தினால் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்தநிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் விலையில்லா வேட்டி, சேலையையும் முறையாக விநியோகம் செய்யப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக தொடங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற ஆண்டு முதல் முடக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு முன்கூட்டியே விநியோகிக்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளில் 50 சதவிகிதம் கூட விநியோகிக்கப்படாமல் இருப்பதே, தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு உரிய வேட்டி,சேலைகளை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, அவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப, உலகின் அனைத்து தொழில்களுக்கும் முதன்மைத் தொழிலாக விளங்கும் உழவுத் தொழிலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவிக்கும் நாளே பொங்கல் திருநாள் ஆகும். அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவலர்களே குற்றவாளிகளாக மாறினால் பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும் ? மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாளே, காவல் ஆய்வாளர் ஒருவர், அதே குற்றச்சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, வழிப்பறி, செயின்பறிப்பு, லாட்டரி விற்பனை, போதைப்பொருள் விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் காவலர்கள் ஈடுபட்டு வருவதும், அதற்காக கைது செய்யப்படுவதும் காவலர்கள் மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், சோதனை எனும் பெயரில் தெருவுக்கு தெரு நிற்கும் போக்குவரத்து காவலர்கள், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி தரக்குறைவாக பேசுவதோடு, அபராதம் எனும் பெயரில் லஞ்சம் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், காவல்துறையின் கண்ணியத்தை பேணிக்காப்பதற்காகவும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, காவலர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: புதுச்சேரி மாநிலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.