இறந்த தாயின் உடலை சைக்கிளில் 18கி.மீ எடுத்துச் சென்ற மகன் – திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டதே அந்த மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எதாவது காரணத்தை கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு – அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கணினி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீண்ட நேரம் மூடி மறைக்கும் முயற்சியில் அரசுப்பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, அரசுப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் தொடங்கி அனைத்து விதமான கட்டடங்களும், உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த துயரச்சம்பவம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று… பாலின பாகுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்புகளின் மூலம் பெண் குழந்தைகள் சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக நிற்கவும், சமத்துவமிக்க வளமான எதிர்காலத்தை பெற்றிடவும் உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களையும் குற்றச் சம்பவங்களையும், அடியோடு தடுத்து நிறுத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.