ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் – ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும். தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், அதன் பின் தற்போது வரை தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை, ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது, அத்தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிக்கு சேர முடியும் என்பதால், அத்தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை அறிவித்து தேர்வை நடத்துவதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் – அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான காலை உணவை வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 300க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவை அம்மா உணவகங்கள் மூலம் தயாரித்து வழங்கினால், மாணவ,மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் கவனிப்பின்றி இருக்கும் அம்மா உணவகங்களும் மேம்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமைக்குரிய மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இதய அறுவை சிகிச்சை துறையில் வியக்கத்தக்க சாதனைகள் பல புரிந்த மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக மருத்துவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும் அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாருக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினர், அவர்களின் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதும், எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால், நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் கூட கண்ணீரில் மூழ்கியிருக்கும் சூழல் நிலவுவதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் நீண்டகாலமாக வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.வேலு ஆசான், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன், திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன். மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.