தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று. கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற இந்த படுபாதக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறேன்!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஸ்ரீமாந் பட்டர் குருகுல வேத பாடசாலையில் பயின்ற மன்னார்குடியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சிறுவனும் கொள்ளிடம் ஆற்றில் அதிகாலை குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உயிரிழந்து நான்கு நாட்கள் ஆன பின்பும் அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளூர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாதது மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் தாராள கள்ளச்சாராய புழக்கத்திற்கு காரணமாக எல்லைகளில் பணியாற்றும் மதுவிலக்கு போலீசார் வியாபாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு விற்பனையை ஊக்குவிப்பதே என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே TASMAC மதுவிற்பனை, போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் இந்த சூழலில் கள்ளசாராய விற்பனையும் சேர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கள்ளச்சாராய புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு இதை கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.