தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால்பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத்தேவையாகும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி, உடனடித் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது மணல் கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை தி.மு.க அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ. கொல்லப்பட்டு ஒரு மாத காலம் ஆன நிலையிலும் கூட, இத்தகைய தாக்குதலில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் மீது வெறுமனே கைது நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே தீர்வாகாது. ஆளுங்கட்சியினர் என்ற அடையாளத்துடன் மணல் கடத்தலில் ஈடுபடுவதையும், தடுப்போர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துவதையும் கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.ஸ்டாலின் கண்டித்து, இனிவரும் காலங்களில் இத்தகயை சம்பவங்கள் நடைபெறாதவாறு இருக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் உள்ளிட்ட இயற்கை வளங்ககளை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன். இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்.

தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 நெல்மூட்டைகள் மாயமானதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இந்த தகவலை மறுக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், 7 ஆயிரம் நெல் மூட்டைகள் இருக்கின்றன என்பதையும் உறுதி செய்ய இயலவில்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மிகவும் அலட்சியமாக திறந்தவெளி குடோனில் சேமித்து வைத்தது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது. 7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த உத்தரவிடவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய தற்போதைய காலகட்டத்தில் குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பில் ஹரி சாதனை செய்திருப்பது போற்றத்தக்கதாகும். மருத்துவர் ஹரி தேர்ந்த மருத்துவராக தமிழ்நாட்டின் மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு தனது மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்றும் அவரது மேற்படிப்பு முயற்சிகளில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்கும் தனியார் மயமாக்கல் முடிவை எதிர்த்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், நாளை முதல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வரும் செய்திகளே, இந்த முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்தத்திற்கு முக்கியக் காரணம். இந்த அறிவிப்பு எழுந்தவுடனேயே, ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதனையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் தனியார் மயமாக்குதலை தீவிரப்படுத்திய அரசின் நடவடிக்கைகளாலேயே மக்கள் இன்று அவதிக்குள்ளாகியுள்ளனர். தனியார் மயமாக்கல் குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தொழிற்சங்கங்களுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அடிக்கடி சொல்லிவரும் போக்குவரத்துத் துறை அமைச்சர், இன்றுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன? மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனே இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.