சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், கால் டாக்சி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறமும் அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் மறுபுறமும் தொடர் தாக்குதல் நடத்தி படகுகளையும் உடமைகளையும் பறிமுதல் செய்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாத வண்ணம் நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.