மேலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினருமான திரு.பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களின் மகன் திரு P.உலகாதிபதி அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகனை இழந்துவாடும் திரு.பி.பெரியபுள்ளான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும். எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழக விளைநிலங்களுக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வபோது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி? எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழியின் அழகையும், அதன் உச்சரிப்பின் பெருமையையும் தனது கம்பீரமான குரலால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த மகா நடிகரும், உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த உன்னதக் கலைஞருமான செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று… வீரம், தியாகம், பாசம், கோபம், சோகம், காதல் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தனது அற்புதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி காலம் கடந்தாலும் கம்பீரம் குறையாத கலைப் பேரரசராக மக்கள் மனங்களின் நிலைத்திருக்கும் சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை – மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன. நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி – பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்குமேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார் ? தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.