திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவுவிவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக்  கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு – அடிக்கடி அரங்கேறும் விபத்துக்களைத் தடுக்க அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அங்கன்வாடி மையங்கள் தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைக் கட்டடங்களின் அவலநிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பறிபோகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இதுபோன்று அடிக்கடி இடிந்து விழும் கட்டடங்களால் ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருப்பதோடு , ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எனவே, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாத வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்னிந்தியத் திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற செயற்குழு உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்டக் கழக செயலாளர் அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்கள் திருச்சபையின் மூலம் தன்னுடைய சமூக சேவையை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திட 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதிநீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதோடு, கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி எந்தவொரு அணையையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமையுள்ள பங்கைப் பெறுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய சூழலில், மேகதாது அணையைக் கர்நாடக அரசு திட்டமிட்டபடி கட்டி முடித்தால், காவிரிப் பாசனப் பகுதிகள் முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மேற்கொண்டு காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 95 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்காமல் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்விப் பணிக்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்க மறுப்பதும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவலநிலையை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடி, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்துவருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்தியாவின் பழமையும், பெருமையுமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக விடுவிப்பதோடு, சிறப்பு நிதியை உருவாக்கி அப்பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என உயர் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தனது உணர்ச்சிக்குக் கவிதைகளின் மூலம் நாட்டு மக்கள் மனதில் விடுதலை உணர்வை மேலோங்கச் செய்தவர், தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்திட்ட புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. கவிஞராக, கட்டுரையாளராக, இதழியலாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களிலும் தாய்மொழியாம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது – ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதே தொடக்கக்கல்வி ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் துயர நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு அடக்க முற்படுவதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவ நினைப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.