தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2026 : விருப்ப மனு பெறுதல்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மழைநீரில் மூழ்கி வீணாகியிருக்கும் பயிர்சேத கணக்கிடும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும் – பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். டிட்வா புயலின் காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்சாகுபாடி முழுமையாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழையின் தொடக்கக் காலத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது டிட்வா புயலின் தாக்கத்தினால் வயல் வெளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரும், அதில் மூழ்கியிருக்கும் நெற்பயிர்களும் காவிரி டெல்டா விவசாயிகள் மீளவே முடியாத அளவிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.டிட்வா புயலின் தாக்கத்தினால் வழக்கத்திற்கு மாறாகப் பெருமழை பொழிந்து வரும் நிலையில், நாளையுடன் நிறைவடைய இருக்கும் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்து தரப்பு விவசாயிகளின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அதற்கான உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நாளையுடன் நிறைவடையும் இருக்கும் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார் – விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதே நேரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.