கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்கள் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், அரைகுறை அறிவு ஜீவிகள் வழங்கிய ஆலோசனையின் படி அவசரகதியில் தவெக அரசு எடுத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய தவறான முடிவால் இன்று விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் அவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.ஆளுநர் உரைக்கு பின் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் உரையில், விவசாயிகளுக்காக இந்த அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்ற கருத்தை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்தார். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, அதை “மற்றவர்களின் தூண்டுதல்” என்ற போர்வைக்குள் அடக்கிப் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உடனடியாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளை வெட்டி, ஒட்டி ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசு, எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்காமல் அவர்கள் முன்வைக்கும் கருத்துகளையும், சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் சரியான பார்வையில் அணுகி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க இனியாவது முன்வர வேண்டும்.எனவே, மக்களை ஏமாற்றியே ஆட்சியை நடத்திவிடலாம் என்ற தங்களின் அதிமேதாவித் தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, உயிரிழந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா? அல்லது போதைப் பொருளைத் தடுக்க முடியாத படையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு பள்ளி சென்று கல்வி பயில வேண்டிய மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் அபாயகரமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அறிவித்த நாள் முதல் காகித அளவிலேயே இருக்கும் போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியதாக தமிழக விவசாயிகள் புகார் – சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடமான பள்ளிகளில், மாணவர்களின் அடையாள அட்டையில் அவரவர் சாதி சார்ந்த விவரங்களைக் குறிப்பிட முனைவது பள்ளி வளாகங்களுக்குள்ளாகவே சாதிய அடையாளங்களை வலுப்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சியாகும்.தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் சாதிய பகுபாடை போக்க வேண்டிய அரசு, அவர்களின் மனதில் சாதிய அடையாளத்தை ஆழமாக விதைப்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானது ஆகும். எனவே, அரசுப்பள்ளிகள் என்பது மாணவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சாதியின் பெயரில் பிரிக்கும் கருவியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் “Thug Life Moment” வீடியோ – போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா? இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய “Thug Life Moment” வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த “Thug Life Moment” வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி திரைக்கதைகளின் மன்னராக வலம் வந்தவரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தவருமான திரு கே.பாக்கியராஜ் அவர்கள் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த திரு கே.பாக்கியராஜ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.