அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? – அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ? அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது. எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளருமான திரு.பூமணி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களின் வாழ்வியலையும், சமூகத்தின் உண்மை நிலைகளையும் தனது படைப்புகளின் மூலம் ஆழமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர் திரு.பூமணி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டைவடக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணைஎடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்இரவு, பகலாக மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், இசையின் இனிமையை தனது குரலால் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்பித்து தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (Nightingale) என அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றிருக்கும் பாடகி எஸ்.ஜானகி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.