திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டைவடக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணைஎடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்இரவு, பகலாக மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், இசையின் இனிமையை தனது குரலால் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்பித்து தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (Nightingale) என அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றிருக்கும் பாடகி எஸ்.ஜானகி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை – ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் இந்தப் போக்கைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 650 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் மேலும் குறைவதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் சுமார் 50 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹4 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன், ஆண்டுக் கல்விக் கட்டணம் ₹20 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை உயரக்கூடும். இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவு முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேர்வு முறைகேடுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதும், அதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மேலும் உயர்வதும், மருத்துவக் கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான தடையின்மைச் சான்றிதழை (No Objection Certificate) எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்காத நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது மாநில உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது, ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகியவற்றில் தமிழக அரசு உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நெல் மூட்டைகள் சேதம் – தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தீயில் கருகி வீணாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதக் கணக்கில் இடைவிடாமல் உழைத்து விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் அனைத்தும் தீயில் கருகி வீணாகும் அளவிற்கு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெல் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறிவதோடு, இதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் அரசு தீவிரமாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் சேமிப்புக் கிடங்குகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.