விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பட்டாசு ஆலைகளை அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த ஐந்தாண்டுகளாக நிராகரித்துக் கொண்டே வந்த திமுக அரசால் தற்போது உயிரிழந்தோருடன் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.VP.குமரேசன், கழக அமைப்பு செயலாளர் திரு.P.R.மனோகரன், கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி, தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் திரு.M.ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று ஆழியார் அருகே உள்ள மலைப்பாதையில் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament ) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் செல்வி.வைஷாலி அவர்கள் அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை – தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.

மீஞ்சூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய போதைக் கும்பல் – திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன. எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.