January 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வேளச்சேரியில் போதைக் கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். சென்னை வேளச்சேரி அருகே போதையில் சுற்றித்திரிந்த கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. பேருந்து, ரயில், மற்றும் விமானநிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சுற்றித் திரியும் போதைக் கும்பலைக் கண்காணிக்கவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொள்வதால் பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் போதைக் கும்பல்களைப் பிடித்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன்களில் காற்று நிரப்பப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
January 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது – பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ? ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்
January 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 17, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோயிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 16, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதகுலம் முழுமைக்குமான வாழ்வியலை வகுத்துக் கொடுத்திருக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவப்பெருந்தகையை போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினம் இன்று. சாதி, மதம், இனம் கடந்து உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றிடும் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற தேசிய இலக்கியமாக திகழும் திருக்குறளை படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
January 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு – தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
January 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
January 13, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடுபத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம்…கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் அவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.வருகின்ற 17ஆம் தேதி பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.தலைமைக் கழகம்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்