மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வளமான வாழ்வை வாழ்ந்திடவும், சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம். புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூறி, மீண்டும் ஒருமுறை எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி திரு அஸ்ரா கார்க் அவர்களும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கூறியிருக்கும் தகவல் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக அமைந்துள்ளது. திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையிலிருந்த சிறுவர்கள் சிலர், வடமாநில இளைஞர் ஒருவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறியதன் விளைவே, சக மனிதர்களையே பட்டாக் கத்தியால் தாக்கி, துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பும் அளவிற்கான கொடூரமான மனநிலையை உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுவதோடு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இயற்கை விவசாயத்தின் மூலம் அறிவுப்புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானியும், நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பசுமைப் போராளியுமான நம்மாழ்வார் அவர்களின் நினைவுதினம் இன்று. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றோடு பாரம்பரியமிக்க நெல் ரகங்களையும் மீட்டெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த விவசாயியாக வாழ்ந்து மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழியை நாளும் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

சமநிலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும். சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் என, ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று. காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியைத் தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்குப் பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய், போன்ற மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில், அவர் விரும்பிய அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம், மற்றும் மதநல்லிணக்கம் மேன்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.