July 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை – மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 17, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
July 15, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன. நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன்.
July 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி – பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்குமேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார் ? தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
July 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு.சரத்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது கலை மற்றும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 14, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
July 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? – அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ? அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது. எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 13, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளருமான திரு.பூமணி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களின் வாழ்வியலையும், சமூகத்தின் உண்மை நிலைகளையும் தனது படைப்புகளின் மூலம் ஆழமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர் திரு.பூமணி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.