July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
July 26, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 26, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதலமைச்சரின் அறை வரை தவெகவினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்? அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு நிர்வாகத்தில் தவெகவினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
July 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும், தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல. எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
July 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா? எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
July 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
July 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவரும், சிறைத் துன்பங்களையும், நோயின் வேதனைகளையும் தாங்கி நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவுதினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராக, எழுச்சியூட்டும் படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக, சொற்பொழிவாளராக எனப் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் மத்தியில் விடுதலைக்கான வேள்வியை விதைத்த போராளி சுப்பிரமணிய சிவா அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
July 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய திரு.ராகுல்காந்தி அவர்களை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ? 2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய திரு. ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.