விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி –  குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது? விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ? எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

தினத்தந்தி நாளிதழைத் தோற்றுவித்து பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பத்திரிகைத் துறையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.

தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு – தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாகப் புகார் – முறையான விசாரணை நடைபெறுவதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும். ​ திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், சக மாணவர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிகளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று சக மாணவிகளே குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் ஒரு சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை – மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டம்  சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த  10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே,கொடூரமான முறையில்  சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில்  தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல்வர் திரு டி கே சிவக்குமார் அவர்களின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும், அணைக் கட்டுமான பணிக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசும், அதன் துணை முதல்வரும் தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் – ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ? அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.