மதுரை உசிலம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி – தாய்மொழி தமிழை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 9 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது தாய்மொழியாம் தமிழ் பாடத்திலேயே 9 மாணவர்கள் தோல்வியடையும் சூழலை உருவாக்கியுள்ளது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும், அரசாணைகளை தமிழ் மொழியிலேயே வெளியிட வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்ட முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப்பள்ளிகளில் தமிழ் பாடத்தை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த 9 மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதோடு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பேராசிரியர் பற்றாக்குறையால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் – தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, குறைவான வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய கால அவகாசத்திற்குள் 24 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை வழங்க தவறியிருப்பதால் அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பிருப்பதோடு அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கத் தவறியதே மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதில் உடனடியாக அளிப்பதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை – கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்களாக, மக்களை பாதுகாப்பதில் அளப்பரிய அன்பு கொண்டவர்களாக, சேவை மனப்பான்மை மிக்க அன்னையர்களின் மறுபிறவியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றிவரும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றிக் கொண்டாடும் உலக செவிலியர் தினம் இன்று. செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி மகிழும் இந்நேரத்தில், தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான கலந்தாய்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அவர்களின் நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாழ்வியல் தத்துவத்தில் முதலிடம் வகிப்பதோடு, அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று.. தமிழக மக்களின் மகிழ்ச்சியே தனது லட்சியம் எனக்கூறி நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்திய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்நேரத்தில் நினைவுகூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.