தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்? தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை. தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை – மாற்று ஏற்பாடுகளை தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருக்கும் முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயம் மட்டுமல்லாது அதனையே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவெக என்பது புதிய அதிமுக என்று பேசும் தவெக அமைச்சர்கள், இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழல் நிலவும் போது இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்போடு, நிலத்தடி நீரின் மூலமாகக் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்வரும் விவசாயப் பெருமக்களுக்கு மும்முனை மின்சாரத்தையும் தடையின்றி வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடையால், மின் மோட்டார்கள் பழுதடைவதும், போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் காய்ந்து வீணாவதாலும் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், டெல்டா பகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் தொகையும் நிலுவையில் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள், விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடுமாறு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு.DK.சிவக்குமார் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கைவிடும் உத்தரவாதத்தையும் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் தேவை குறித்தான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென் சென்னை மாவட்டக் கழக செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான செல்வி.CR.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன் ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

இஸ்லாமிய சமுதாயத்தின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தவருமான பெரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய் நாட்டின் நலனே தனது நலனாகக் கருதி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததோடு, அநீதிக்கும், அடக்குமுறைக்கும் ஆளான மக்களின் பிரதிநிதியாக நின்று அவர்களின் மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் – முதலமைச்சரின் முதல் கையெழுத்தான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா ? பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்? தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். தட்டுத் தடுமாறி அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில், நாள்தோறும் நடைபெறும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்குப் போட்டி, பொறாமை, பதற்றம் என புதுப்புது அர்த்தத்தைப் புகுத்தி, விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமலும், அவற்றை சரி செய்ய முனைப்புக் காட்டாமலும், எதற்கு கால அவகாசம் கேட்க வேண்டும் என்பது புரியாமலும் போர்க்கால அடிப்படையில் (Emergency Issues) தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கும், கால அவகாசம் கோருவது எந்த விதத்தில் நியாயம் என்பதே எங்களின் கேள்வி. ஏற்கனவே காவல்துறையில் நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயரை மாற்றி, புதிதாக எந்த ஒரு பணி நியமனமும் ஏற்படுத்தாமல், ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் பணியிலுள்ள காவலர்களையே வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைக் கூட தொடங்கி வைக்கக் காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான் தற்போதைய தவெக அரசு உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு மெல்ல மெல்ல வெளியே வரும் சமூக விரோதிகள், இம்முறை புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சுதந்திரமாக செயல்படுவதும், குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவதும் தவெக அரசின் மீது அவர்களுக்கு துளியளவும் அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. அதோடு போதைப் பொருட்களின் புழக்கத்தை கடந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன்னிடம் இருக்கும் காவல்துறையை பயன்படுத்தி இதுவரை எத்தனை கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்துள்ளார் ? திறமையான காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயங்குவது ஏன் ? எனவே, பெண்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமுமின்றி செயலாற்ற வேண்டியது முதலமைச்சரின் முதல் கடமை என்பதை உணர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திடுவதோடு கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.