உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதா? மாதாந்திர உதவித் தொகையை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகத் திகழும் அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு அதிகார போக்குடன் காவல் துறையை ஏவிப் போராடியவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதுச்சேரியில் 4 ஆயிரம் முதல் 5,700 ரூபாய் வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 1,500 ரூபாய் முதல் 2000 வரையிலான உதவித்தொகையை மட்டுமே வழங்குவது ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உதவித் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்குவதோடு கைது செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கேத்தனூரிலும், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்திலும் விஷ ஜந்துகள் கடித்ததில் அரசுப்பள்ளி மாணவர், மாணவி உயிரிழப்பு – அரசுப்பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் ஒருவரும், நாமக்கல் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதியின்மை, தரமற்ற காலை மற்றும் மதிய உணவு, பாழடைந்த நிலையிலான வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சி போன்ற விஷ ஜந்துக்களும் நுழைந்திருப்பது அப்பள்ளிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பெயரில் திரைப்பட பிரபலங்களையும் அண்டை மாநில அரசியல்வாதிகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருப்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விஷப்பூச்சி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் – திமுக அரசின் இலங்கைத் தமிழர்கள் மீதான போலிப் பாசம் கடும் கண்டனத்திற்குரியது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், போதுமான வசதியின்மை காரணமாக தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31 ஆம் தேதி முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் குடியிருப்பு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருப்பது அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளைக் கூட முறையாகக் கட்டிக் கொடுக்க முடியாத திமுக அரசும், அதன் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களும்,இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமையை மீட்கவும் குரல் கொடுப்பது என்பது வெட்கக்கேடானது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வு ஒத்தி வைப்பு – லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. இன்று நடைபெறவிருந்த சார்பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், ஹால்டிக்கெட் வழங்கியதிலும் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுப்பணி எனும் கனவை நினைவாக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு,பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், முறையான திட்டமிடலின்றியும், சரியான ஏற்பாடுகளின்றியும் தேர்வை நடத்த முயற்சித்திருக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மீதான செயல்பாடு தேர்வர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் அறிக்கையில் 187வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் இளைஞர்கள் நிரப்பப்படுவார்கள் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அப்பணிகளுக்கான தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாமல் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, குரூப்2, குரூப்2ஏ தேர்வில் குளறுபடிகள் ஏற்படும் அளவிற்கு அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து விதமான ஏற்பாடுகளோடு இத்தேர்வை மீண்டும் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாமநத்தம் அருகே அதிமுகவின் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு.தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எஞ்சிய நாட்களிலாவது தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பணிநிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் திரு முத்துச்சாமி அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

விவசாயப் பெருமக்களின் நலனுக்காக இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவருமான உழவர் பெருந்தலைவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று. இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமானவிலை என விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளை மாபெரும் போராட்டங்களின் மூலம் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வெற்றியும் கண்ட விவசாயிகளின் விடிவெள்ளி திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா? திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.