August 12, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு. அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் திரு. அமுதன் அவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும் மாணவர், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கு தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் மாணவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுப்பதில் எந்தவிதப் பயனுமில்லை.போதைப் பொருள் குறித்து மாணவர் திரு. அமுதன் அவர்கள் தெரிவித்த தகவலை ரகசியம் காத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே அதனைக் கசிய விட்டதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலே மாணவர் திரு. அமுதன் உயிரிழப்புக்கான காரணம் என அமைச்சரும் காவல்துறையினரும் பிரச்னையை மூடி மறைக்க முயல்கின்றனர் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர் திரு. அமுதன் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, இளைய சமுதாயத்தினரின் உடல்நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 12, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!
August 11, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்”என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 11, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும் , மாலை முரசு நாளிதழின் அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து இயங்கிய பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
August 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் . பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
August 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ? இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
August 7, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு – தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ? காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ? கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.