August 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ? இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
August 7, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு – தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ? காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ? கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
July 28, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதும், சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுப்பதும் தான் தவெகவின் அடிப்படை கொள்கையா? – மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தவெகவினர் அரங்கேற்றும் அத்துமீறல்களுக்கும் அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
July 28, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு. ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்திருக்கும் பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
July 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.