நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

தெலுங்கானா மாநிலத்திலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பேருந்து மதீனா நகரின் அருகே விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 42 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. புனிதப் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு – தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி அனைத்து வகையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா ? தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே,கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை – 15ஆம் தேதியுடன் நிறைவடையும் கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் உள்ளிட்ட 11 வகையிலான பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறையின் காரணத்தாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையாலும் ஏராளமான  விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.பயிர்காப்பீடு செய்வதற்கான அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்க வேண்டிய வருவாய் நிர்வாக அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்களையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

டெல்லி செங்கோட்டை அருகே கார்வெடிப்பு ஏற்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இத்தகைய கோர சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.

கேரள போக்குவரத்துத்துறையின் சாலைவரி விதிப்பு மற்றும் அபராத நடவடிக்கையால் ஆம்னி பேருந்து உரிமையாளகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு – பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் அம்மாநில போக்குவரத்து துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 70 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலச் சாலைவரிகளை செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக கூறி கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையை முழுமையாக முடக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆம்னிபேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு என தனி வகையிலான பெர்மிட் (Permit) இல்லாத காரணத்தினால் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளை இயக்குவதிலும், விபத்துக்கள் ஏற்படும் போது இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக ஆம்னிபேருந்து உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும், அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் விடுத்திருக்கும் தனி பெர்மிட் (Permit) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.