கூலி உயர்வு கோரி ஒரு வார காலத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் – தமிழக அரசு தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கூலி உயர்வு கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அத்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை நடைபெற்ற பத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்திருக்கும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேறு வழியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக கூலிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் அடங்கிய பேச்சுவார்த்தையை உடனடியாக ஏற்பாடு செய்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் திரு.ஷிஹான் ஹிசைனி அவர்கள் சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் வில்வித்தை சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை சாதனையாளர்களாக மாற்றிய திரு.ஷிஹான் ஹுசைனி அவர்களின் உறவினர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னையில் இன்று ஒரே நாளில் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் செயின்பறிப்பு சம்பவங்கள் – தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும். சென்னையில் இன்று ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களை காவல்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மீண்டும் அதே செயின்பறிப்பு சம்பங்கள் தொடர்ந்து அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையின் செயலற்ற நிர்வாகத்திறனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு அசாதாரண சூழலையும் உருவாக்கியுள்ளது. எனவே, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை – வாக்குறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்ற மறுப்பது சீர்மரபினருக்கு திமுக அரசு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒன்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீர்மரபு வகுப்பினர் (DNC) மற்றும் சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரகதியில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த சீர்மரபினர் சமூகத்திற்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும். தேர்தலுக்கு முன்பாக எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதும், மறந்து விடுவதும் திமுகவினரின் அடிப்படை குணம் என்பது, சீர்மரபினர் ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் சீர்மரபினர் சமூகத்தினரை ஏமாற்றாமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுவதோடு, சீர்மரபினர் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.